ரபேல்.. 2.86% குறைந்த விலையில்தான் பாஜக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.. சிஏஜி அறிக்கையில் பரபர தகவல்!
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை தற்போது ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
Recommended Video
டெல்லி: மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை தற்போது ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. பாஜக அரசு, காங்கிரஸ் அரசை விட குறைந்த விலையில்தான் இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரபேல் ஒப்பந்தம் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. ரபேல் ஒப்பந்தத்தில் பாஜக மிகப்பெரிய ஊழலை செய்து இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்து உள்ளது.
இந்த ஊழலில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு உள்ளது, அவர் அனில் அம்பானிக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று காங்கிரஸ் தலைவர் குற்றஞ்சாட்டி இருந்தார்.
என்ன குற்றச்சாட்டு
காங்கிரஸ் ஒப்பந்தம் செய்த விலையை விட அதிக விலைக்கு பாஜக குறைவான ரபேல் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் இருந்து வாங்கியுள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டி இருக்கிறது. இது தொடர்பான உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கு எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது. இந்த நிலையில்தான் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
|
சிஏஜி அறிக்கை
சிஏஜியின் தலைமை ஆடிட்டர் ராஜீவ் மெரிஷி தலைமையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. குடியரசுத்தலைவரின் ஒப்புதலை அடுத்து இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் என்ன மாதிரியான விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது.
இரண்டு பாகம்
ரபேல் ஒப்பந்தம் உட்பட இந்தியா விமானப்படைக்காக செய்யப்பட்ட 11 ஒப்பந்தங்கள் இந்த சிஏஜி அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது. விமான கொள்முதல் என்ற பெயரின் கீழ் சிஏஜி அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. இது இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. முதல் பாகத்தில் 10 வெவ்வேறு விமான கொள்முதல்கள் குறித்த விவரங்கள் இருக்கிறது.
ரபேல் பாகம்
இரண்டு பாகத்தையும் சேர்த்து சிஏஜி அறிக்கை 144 பக்கங்கள் உள்ளது. மொத்த இரண்டாவது பாகம் முழுக்க முழுக்க ரபேலுக்காக ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதில் கொள்முதல் பேரம் தொடங்கி ஒப்பந்தம் முடிந்த வரை செய்யப்பட்ட நடைமுறைகள் எல்லாம் இடம்பெற்று இருக்கிறது.
அதே மாதிரி
இந்த அறிக்கையில் தனிப்பட்ட ரபேல் விமானத்தின் விலை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. அதேபோல் off - set பார்ட்னர் எனப்படும், இந்திய ஒப்பந்த நிறுவனமான ரிலையன்ஸ் டிபன்ஸ் குறித்தும் விவரங்கள் இடம்பெறவில்லை. ரபேல் குறித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் இருந்த விவரங்களே இதில் அதிகம் இடம்பெற்று இருக்கிறது.
குறைவான விலை
இதில் அடங்கி இருக்கும் மிக முக்கியமான விவரம் என்னவென்றால், ரபேல் ஒப்பந்தம் சென்ற ஆட்சியை விட குறைவான விலையில் செய்யப்பட்டு இருக்கிறது என்பதுதான். அதாவது காங்கிரஸ் ஆட்சியை விட 2.86% குறைவான விலையில் ரபேல் ஒப்பந்தம் பாஜக ஆட்சியில் போடப்பட்டுள்ளது. பாஜக அரசு செய்த ஒப்பந்தம் குறைவான விலையில் செய்யப்பட்டுள்ளது என்று சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
லோக்சபாவில்
அதேபோல் இந்த அறிக்கை இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இன்றுதான் இந்த ஆட்சியின் கடைசி லோக்சபா கூட்ட தொடர் ஆகும். அதனால் இந்த அறிக்கை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மீதான விவாதம் இன்று நடத்தப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.