'அதிர்ஷ்டம் இருந்தா 5%'.. பொருளாதார வளர்ச்சி குறித்து ஆருடம் சொன்ன ரகுராம் ராஜன்..பாய்ந்து வந்த பாஜக
டெல்லி: ஒரு வேளை அதிர்ஷ்டம் இருந்தால் அடுத்த ஆண்டு 5% பொருளாதார வளர்ச்சியை நாம் எட்டலாம் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் பின்னடைவை சந்தித்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று ராஜஸ்தானில் நடைபெற்ற பாரத் ஜடோ யாத்திரையில் ரகுராம் ராஜன் பங்கேற்றிருந்தார். இதனையடுத்து இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சி
அவர் கூறியுள்ளதாவது, "அடுத்து வரும் ஆண்டு இந்திய பொருளாதாரத்திற்கு சவாலான ஆண்டாக இருக்கும். உண்மையில் நமக்கு ஒருவேளை அதிர்ஷ்டம் இருந்தால் அடுத்த ஆண்டு 5% வரை பொருளாதார வளர்ச்சியை நம்மால் எட்டமுடியும். அதேபோல பொருளாதார வளர்ச்சி எதன் அடிப்படையில் கணிக்கப்படுகிறது என்பது குறித்தும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். 2019ம் ஆண்டு கொரோனா தொற்றுக்கு முன்னர் நாட்டின் வளர்ச்சி எப்படி இருந்தது என்றும், தற்போது எப்படி இருக்கிறது, என்பதையும் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

கொரோனா
இந்த மந்த நிலைக்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அதாவது, கொரோனா தொற்று காலத்தில் வீட்டிலிருந்து பணி செய்யும் முறை தொடங்கியது. இதனால் பொருளாதாரத்தில் இருக்கும் மேல் தட்டு வர்க்கத்தினருக்கு எந்த பிரச்னையும் கிடையாது. நடுத்தர வர்க்கத்தினரும் பெரிய அளவு பாதிக்கப்படவில்லை. ஆனால் அடித்தட்டு மக்கள்தான் இதில் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். அவர்களுக்கான வருமானம் பூஜ்யமாக சுருங்கியது. சரி கொரோனா காலத்தில் மட்டும்தான் இந்நிலைமை என்றால், அக்காலகட்டம் கடந்த பின்னரும் இதே நிலைமைதான் நீடித்து வருகிறது.

விமர்சனம்
இதனை சரி செய்ய அரசு தவறிவிட்டது. அடித்தட்டு மக்களை கருத்தில் கொண்டு பொருளாதார கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். இது தவறும் பட்சத்தில் இதேபோன்ற நிலைதான் நீடிக்கும்" என்று ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார். ஆனால் இக்கருத்தை பாஜகவினர் ஏற்றுக்கொள்ளவில்லை. நேற்று ரகுராம் ராஜன் ராகுல் காந்தியுடன் பேரணியில் பங்கேற்றதை சுட்டிக்காட்டி அவர் மீது கடும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர். ரகுராம் ராஜனின் கருத்து சந்தர்ப்பவாதமானது என்றும் பாஜக விமர்சித்துள்ளது.

ப.சிதம்பரம்
இது குறித்து பாஜகவின் வெளியுறவுத் துறைத் தலைவர் விஜய் சவுதைவாலே கூறுகையில், "ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் அரசாங்கத்தின் முக்கிய தலைவராக 10 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். ஆனால் இப்போது காங்கிரஸ் பின்னாள் இருக்கிறார். நல்லவேளை பிரதமர் மோடி அவரை மீண்டும் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கவில்லை" என்று கூறியுள்ளார். இக்கருத்துக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்திருக்கிறது. இது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், "பொருளாதார நிபுணர்களை மோடி சந்திக்காததாலும், பொருளாதார நிபுணர்களால் மோடியை அணுக முடியாததாலும்தான் இந்த அளவுக்கு பாஜகவினர் கோபமடைகின்றனர்" என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications