‛பயப்படாதீங்க மோடி’’.. காங்கிரஸ் ஜெயிப்பது பணத்தால் அல்ல.. வங்கி கணக்கு முடக்கத்துக்கு ராகுல் பதிலடி
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ள நிலையில், "நாங்கள் ஒருபோதும் சர்வாதிகாரத்திற்கு தலைகுனிய மாட்டோம்" என ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
லோக்சாபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாராங்களை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் இந்த தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்க போராடிக்கொண்டிருக்கிறது. ஆட்சியில் இல்லாத இந்த 10 ஆண்டுகளில் கட்சி எதிர்கொண்ட பிரச்னைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஏற்கெனவே ஆட்சியிலிருந்த மாநிலங்கள் தற்போது கை நழுவி இருக்கிறது. மூத்த தலைவர்கள் சிலர் வெளியேறி உள்ளனர்.

கடந்த லோக்சபா தேர்தலில் 421 தொகுதிகளில் களம் கண்ட காங்கிரஸ் வெறும் 52 இடங்களில் மட்டுமே வென்றது. எனவே இந்த முறை எப்படியாவது பாஜகவை தோற்கடிப்பது என தீவிர முயற்சியுடன் களம் இறங்கியுள்ளது. பாரத் ஜடோ யாத்திரை, விவசாயிகளுக்கான போராட்டத்திற்கு ஆதரவு, வேலை வாய்ப்பு பிரசன்னைகளை தீவிரமாக கையில் எடுப்பது என காங்கிரஸ் வீரியமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆளும் பாஜகவை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
தேர்தல் பத்திர விற்பனையை இந்த தீர்ப்பு முடக்கியது. தேர்தல் பத்திர விற்பனை மூலம் பெரும் பலன்களை அடைந்தது பாஜகதான். இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது முதல் தற்போது வரை பாஜக ரூ.6,559 கோடி நிதியை கார்ப்ரேட்களிடமிருந்து பெற்றிருக்கிறது. அதாவது இந்த திட்டத்தின் மூலம் மொத்தம் பெறப்பட்ட நிதியில் பாஜவுடையது மட்டும் 60 சதவிகிதம். இப்படி இருக்கும்போது இந்த திட்டத்தையே உச்சநீதிமன்றம் முடக்கியது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அடுத்த நாளான இன்று, மத்திய அரசின் வருமான வரித்துறை பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக்கணக்குகளை முடக்கியுள்ளது. 2018-2019 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாகவும், அதற்கு அபராதமாக ரூ.210 கோடி செலுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி மற்றும் இளைஞர் காங்கிரஸின் 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
வருமான வரித்துறையின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான், "வருமான வரித்துறையின் நடவடிக்கையால் எங்களால் மின் கட்டணம் கூட செலுத்த முடியவில்லை. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. மட்டுமல்லாது பாரத் ஜடோ யாத்திரை போன்ற அரசியல் நடவடிக்கைகள் இதன் மூலம் முடங்கும்" என்று கூறியுள்ளார்.
ராகுல் காந்தி கூறுகையில், "நாங்கள் ஒருபோதும் சர்வாதிகாரத்திற்கு தலைகுனிய மாட்டோம். மோடி ஜி நீங்கள் பயப்பட வேண்டாம் காங்கிரஸ்" பணத்தால் இயங்கும் கட்சியல்ல, மக்களால் இயங்கும் கட்சி. எங்களின் தொண்டர்கள் ஒவ்வொருவரும், ஜனநாயகத்தை காக்க தொடர்ந்து போராடுவார்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications