அனுமதி பெறாமல் இங்கிலாந்து பயணமா? - ராகுல் காந்தியை வறுத்தெடுக்கும் பாஜக.. காங்கிரஸ் ‘தடாலடி’ பதில்!
டெல்லி : காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி வெளியுறவுத்துறையின் அனுமதி பெறாமல் பிரிட்டனுக்கு பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தி அனுமதி பெறாமல் வெளிநாடு சென்றதாக கூறப்படும் நிலையில், ராகுல் காந்தியிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அதிகாரப்பூர்வ குழுவில் அங்கம் வகிக்காத எம்.பி.க்கள் வெளிநாடு செல்ல பிரதமர் அல்லது அரசிடம் இருந்து அரசியல் அனுமதி பெறத் தேவையில்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
சுனிலுக்கு ராகுல் ஓ.கே. சொன்னது எப்படி தெரியுமா? பின்னணியில் அவர் இருக்கிறாராம்! என்ன விவரம்?
பிரிட்டனில் ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். பிரிட்டன் சென்றுள்ள ராகுல் காந்தி, அங்கு, பாஜக அரசின் பல்வேறு நிலைப்பாடுகள் குறித்தும் விமர்சித்துப் பேசி வருகிறார்.
அனுமதி பெறவில்லை?
பிரிட்டன் சென்றுள்ள ராகுல் காந்தி தனது பயணத்திற்கான உரிய அனுமதியை மத்திய அரசிடமிருந்து பெறவில்லை எனக் கூறப்படுகிறது. பொதுவாக, எம்.பி ஒருவர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் மத்திய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதற்கான அனுமதியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அளிக்கும்.
எம்.பி பயணம்
எம்.பி.யின் பயண விவரம் குறித்த தகவலை வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தெரிவித்து பயணத்திற்கு 3 வாரங்களுக்கு முன்னதாகவே அனுமதி பெற வேண்டும். வெளியுறவு அமைச்சகம் தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அனுமதி அளிக்கப்பட்டது குறித்து அறிவிப்பு வெளியிடும்.
அழைப்பு விடுக்கப்பட்டால்
வெளிநாட்டு அரசாங்கங்கள், வெளிநாட்டு அமைப்புகள் இந்தியாவைச் சேர்ந்த எம்.பி ஒருவரை தங்கள் நாட்டிற்கு அழைக்க விரும்பினால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமே அழைப்பு விடுக்கவேண்டும். வெளியுறவு அமைச்சகம் சம்பந்தப்பட்ட எம்.பிக்கு அழைப்பை அனுப்பும். எம்.பி. நேரடியாக அழைக்கப்படும் பட்சத்தில் அந்த அழைப்பு குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தெரியப்படுத்தி மத்திய அரசின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
ராகுல் அனுமதி பெறவில்லை
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது பிரிட்டன் பயணம் தொடர்பாக மத்திய அரசிடமிருந்து உரிய அனுமதி பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசிடமிருந்து உரிய அனுமதி பெறாமல் பிரிட்டன் சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மத்திய பாஜக அரசு குறித்தும் விமர்சித்துப் பேசியுள்ளார்.
விரைவில் நோட்டீஸ்
ராகுல் காந்தி இந்த வெளிநாட்டுப் பயணத்திற்கு வெளியுறவுத்துறையின் அனுமதியை பெறவில்லை என்ற விவகாரம் தீவிரமானதை தொடர்ந்து, இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.கவினர் ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரி வருகின்றனர்.
காங்கிரஸ் கண்டனம்
ஆனால் அனுமதி பெறத் தேவையில்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. "அதிகாரப்பூர்வ குழுவில் அங்கம் வகிக்காத எம்.பி.க்கள் வெளிநாடு செல்ல பிரதமர் அல்லது அரசிடம் இருந்து அரசியல் அனுமதி பெறத் தேவையில்லை. தயவுசெய்து தொலைக்காட்சி சேனல்களுக்கு அனுப்பப்படும் பிரதமர் அலுவலக வாட்ஸ்அப் பரிந்துரைகளை கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டாம்" என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.