நாட்டில் வெறும் 42% மக்களுக்குதான் 2 டோஸ் தடுப்பூசி.. பூஸ்டர் எப்போ போடுவீங்க? ராகுல் காந்தி கேள்வி
டெல்லி: நாட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி போடப்படாத நிலையில், மத்திய அரசு பூஸ்டர் தடுப்பூசிகளை எப்போது வழங்கும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்
இந்தியாவில் கொரோனா பாதிப்பை அடுத்து ஓமிக்ரான் பரவலும் அதிகரித்துள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்டோருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை மத்திய அரசு மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளனர்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை. பிப்ரவரி மாதத்தில் கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு காரணமாக மூன்றாவது அலை ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தியாவில் பூஸ்டர் தடுப்பு ஊசிகள் எப்போது வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல்காந்தி கேள்வி
இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், நாட்டில் பெரும்பாலான எண்ணிக்கையிலான மக்களுக்கு இன்னும் covid-19 தடுப்பூசி போடவில்லை, மத்திய அரசு எப்போது மக்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசிகளை வழங்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது உள்ள தகவலின் படி டிசம்பர் மாத இறுதிக்குள் 42 சதவீத மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்துவார்கள் என்றும், கொரோனா வைரஸின் மூன்றாவது அலையை தடுக்கத் தேவையான 60 சதவீதத்தை எட்டுவது எப்போது எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
தடுப்பூசி தரவுகள்
மேலும் தனது ட்விட்டர் பதிவில் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்களையும் ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார். அதில் கொரோனா 3வது அலையை சமாளிக்க வேண்டுமானல், டிசம்பர் மாத இறுதிக்குள் 60 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போதுள்ள நிலவரப்படி டிசம்பர் மாத இறுதியில் 42 சதவீத மக்கள்தான் தடுப்பூசி செலுத்தியிருப்பார்கள் எனவும், இது எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை விட 18 சதவீதம் குறைவு என கூறப்பட்டுள்ளது.
Recommended Video
எண்ணிக்கை பற்றாக்குறை
அதேபோல் ஒருநாளைக்கு 61 மில்லியன் அதாவது 6 கோடியே 10 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியாக வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், நேற்று 5.7 மில்லியன் மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்றைய நிலவரப்படி மொத்த பற்றாக்குறை 55.3 மில்லியனாக உள்ளது. கடந்த ஏழு நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 5.8 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், பற்றாக்குறை 55.2 மில்லியனாக உள்ளது எனவும் ராகுல்காந்தி பதிவிட்டுள்ள தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் விமர்சனம்
கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி குறித்த வியூகத்தை தொடர்ந்து விமர்சித்து வரும்நிலையில், மக்களுக்கு தடுப்பூசி அளிக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.