ஓட்டு போட்ட கையோடு செல்ஃபி எடுத்த ராகுல் காந்தி.. நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய கோரிக்கை!
டெல்லி: டெல்லியில் இன்று வாக்களித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி. வாக்களித்த பிறகு எடுத்த செல்ஃபியோடு, மக்களுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார் ராகுல் காந்தி.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டங்களாக 430 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இன்று ஆறாம் கட்டத் தேர்தல் 58 லோக்சபா தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.

பீகார் மாநிலத்தில் 8 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கும், உத்தர பிரதேசத்தில் 15 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும், டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. டெல்லியில் இன்று காலை முதல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. டெல்லியில் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் புதுடெல்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர்கள் மூவரும் இன்று புது டெல்லியில் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். புதுடெல்லி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக சோம்நாத் பாரதி போட்டியிடுகிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஒரே காரில் வருகை தந்து, புதுடெல்லி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். வாக்களித்த பின்னர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வரும்போது தனது தாய் சோனியா காந்தியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார் ராகுல் காந்தி.
ஜனநாயகக் கடமை ஆற்றிய பிறகு எக்ஸ் தளத்தில், தாங்கள் வாக்களித்த பிறகு எடுத்துக்கொண்ட செல்ஃபியை பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி. அதோடு, மக்கள் அனைவரையும் வாக்களிக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில், "நாட்டு மக்களே! வாக்குப்பதிவின் முதல் ஐந்து கட்டங்களில், நீங்கள் பொய்கள், வெறுப்பு மற்றும் பிரச்சாரங்களை நிராகரித்து, உங்கள் வாழ்க்கை தொடர்பான அடிமட்ட பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்து வாக்களித்துள்ளீர்கள்.
இன்று ஆறாவது கட்ட வாக்குப்பதிவு, உங்கள் ஒவ்வொரு வாக்கும் இதை உறுதி செய்யும்:
30 லட்சம் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மற்றும் இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் முதல் வேலை உறுதித் திட்டம் தொடங்கப்படும்.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் கணக்கில் மாதம் ரூ.8,500 வரத் தொடங்கும்.
விவசாயிகள் கடனில் இருந்து விடுபட வேண்டும் மற்றும் அவர்களின் பயிர்களுக்கு சரியான குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக 400 ரூபாய் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
உங்கள் வாக்கு உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்கும்.
ஜனநாயகத்தின் இந்த மாபெரும் திருவிழாவில் நானும், எனது அம்மாவும் வாக்களித்து பங்களித்தோம்.
நீங்கள் அனைவரும் அதிக எண்ணிக்கையில் உங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து, உங்கள் உரிமைகளுக்காகவும், உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும் வாக்களிக்க வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications