விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் தலைமையில் காங். எம்.பிக்கள் போராட்டம்
டெல்லி: மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இன்று காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் 8 மாதங்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கொட்டும் பனி, வாட்டும் குளிர், வதைக்கும் வையில், இடைவிடாத மழை என பார்க்காமல் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

டெல்லியில் தற்போது நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதனால் நாடாளுமன்றம் அருகே ஜந்தர் மந்தரில் விவசாயிகளின் நாடாளுமன்றம் என்ற நிகழ்ச்சியை விவசாயிகள் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக டெல்லி எல்லையில் இருந்து இன்று விவசாயிகள் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகளில் ஜந்தர் மந்தருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்படி அழைத்து சென்றபோது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதேபோல் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவசாய சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தனர். அத்துடன் லோக்சபா, ராஜ்யசபாவில் விவசாய சட்டங்களுக்கு எதிராகவும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் காலை முதலே விவசாய சட்டங்களுக்கு எதிராக பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமை ஏற்று நடத்தினார்.
விவசாய சட்டங்களுக்கு எதிரான அடுத்தடுத்த போராட்டங்களால் டெல்லியில் பரபரப்பு நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications