ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு.. அலட்சியமாக இருப்பவர்களுக்கு அட்வைஸ்
டெல்லி: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொடிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில் புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் டெல்டா வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

பயமுறுத்தும் ஓமிக்ரான்
பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருந்த நிலையில் அதனையும் தாண்டி ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவுக்குள் புகுந்து விட்டது. இந்தியாவில் தற்போது 2,500-க்கும் மேற்பட்ட ஓமிக்ரான் பாதிப்புகள் உள்ளன. கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, ஒடிசா என ஏகப்பட்ட மாநிலங்களில் பாதிப்பு பரவி கிடக்கிறது.

உச்சக்கட்ட நிலை
ஓமிக்ரான் காரணமாக நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சகட்ட நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வந்துள்ளன. முக்கிய பிரமுகர்களையும் கொரோனா தாக்கி வருகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அசோக் கெலாட்டுக்கு கொரோனா
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அசோக் கெலாட் , தனக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், பகலில் தம்மைத் தொடர்பு கொண்ட அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். தனக்கு ஏற்பட்ட அறிகுறிகள் மிகவும் லேசானவை, வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். அசோக் கெலாட்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும்.ஏற்கனவே அவர் கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தார்.

கவனக்குறைவான மக்கள்
''கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு ஆபத்தானது அல்ல என்று பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது, எனவே மக்கள் கவனக்குறைவாக உள்ளனர். ஓமிக்ரானில் இருந்து மீண்டு வந்த பிறகு கொரோனாவின் பிந்தைய பிரச்சினைகள் முந்தைய வகைகளைப் போலவே கடுமையானதாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்'' என்று அசோக் கெலாட் கூறினார்.












Click it and Unblock the Notifications