யாரோ கூறும் கருத்தையே அமைச்சர்கள் கூறுவார்கள்.. அது அரசின் நிலைப்பாடு இல்லை.. ராகேஷ் டிக்கைட் பேச்சு
டெல்லி: மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகளின்போது, யாரோ கூற விரும்புவதையே அமைச்சர்கள் கூறுவார்கள் என்றும் அது அரசின் கருத்து இல்லை என்றும் விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அதிலும் குறிப்பாகத் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்ட பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இருப்பினும், இரு தரப்பிற்கும் இடையே எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்நிலையில், இந்திய டுடே செய்தி நிறுவனத்திற்கு ராகேஷ் டிக்கைட் அளித்த பேட்டியில் பேச்சுவார்த்தையின்போது என்ன நடந்தது என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார்.
அடிக்கடி ப்ரேக்
மத்திய அரசுடன் பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்துப் பேசிய ராகேஷ் டிக்கைட், "பேச்சுவார்த்தையின்போது அதிகாரிகள் அமைச்சர்களுக்குச் சீட்டுகளை வழங்கினர். அதை மட்டுமே அவர்கள் பேசினர். அதாவது யாரோ ஒருவர் பேச சொல்லிக் கூறியதை மட்டுமே அமைச்சர்கள் பேசினர். பேச்சுவார்த்தையின்போது அவர்கள் அடிக்கடி ப்ரேக் எடுத்துக்கொள்வார்கள். என்ன கேள்வியை முன் வைத்தாலும் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து வந்தே பதில் கூறுவார்கள்" என்றார்.
அரசின் கருத்து இல்லை
நீண்ட நேரம் நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது என்ன நடைபெறும் என்பது குறித்து அவர் கூறுகையில், "நாங்கள் எதாவது கேள்வி கேட்போம். உடனே உள்ளே சென்று யாரிடமோ பதிலைக் கேட்பார்கள். பின் மீண்டும் வந்து எங்களிடம் யாரோ கூறியதைச் சொல்வார்கள். சுருக்கமாகச் சொன்னால், யாரே கூறுவதை அவர்கள் திரும்ப எங்களிடம் கூறினர். இது அரசின் கருத்தே இல்லை" என்றார்.
கோரிக்கை
அரசு அதிகாரிகள் அளித்த குறிப்புச் சீட்டுகளை வைத்தே அமைச்சர்கள் பதில் கூறினார்கள் என்றும் அவர் தெரிவித்தார். வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேச்சுவார்த்தையில் அதிகம் உரையாடினார் என்றும் பியூஷ் கோயல் இரண்டு முறை மட்டுமே பேசினார் என்றும் அவர் குறிப்பிட்டார். விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதையே கோரிக்கையாக முன் வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமருடன் பேச்சுவார்த்தை நட்ட தயார்
விவசாய சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு தயாராக இல்லை என்று கூறிய பின்னரும் பேச்சுவார்த்தை நடத்தியது ஏன் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "அரசு எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதனாலேயே நாங்கள் அங்கு சென்றோம்" என்று பதிலளித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியுடனும் பேச்சுவார்த்தை நடந்த தாயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மற்ற விவசாயச் சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அடுத்த கட்ட திட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.