ஒற்றை கண்ணீர்.. மொத்தமாக வந்த விவசாயிகள்.. ஸ்தம்பித்த போலீஸ்! காசிப்பூர் எல்லையில் திடீர் திருப்பம்
டெல்லி: போராட்டத்தில் இருந்து பின்வாங்க ஆரம்பித்தனர் விவசாயிகளின் ஒரு பகுதியினர்.. அப்போதுதான் அந்த மாற்றம் நடந்தது.. ஒரே ஒருவரின் கண்ணீர் போராட்ட களத்தின் தோற்றத்தையே மாற்றிவிட்டது.
Recommended Video
விவசாயிகள் அனைவரும் முன்பை விட அதிகமாக போராட்டக் களத்திற்கு திரும்பிவிட்டனர். ஒரு கண்ணீருக்கு இத்தனை சக்தியா என்று வியந்து பார்க்கிறது உத்தரபிரதேசம்.
டெல்லியின் பல்வேறு எல்லைகளிலும், மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இரு மாத போராட்டம்
உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி சந்திக்கும் பகுதியான காசிப்பூர் பகுதியிலும் இப்படித்தான் ஆயிரக் கணக்கான விவசாயிகள் இரண்டு மாதங்களாகப் போராடி வருகின்றனர். உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த மாநில எல்லையில் குவிந்து போராடி வருகிறார்கள்.
குடிநீர், மின்சாரம்
ஆனால் குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்களைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது. காசிப்பூர் பகுதி, உத்தரப் பிரதேச மாநில எல்லைக்குள் இருப்பதால், அந்த மாநில அரசு, போராடும் விவசாயிகளை காவல்துறையை வைத்து ஒடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கிறது. இதன் ஒரு பகுதியாக அங்கு மின்சாரம், தண்ணீர் உள்ளிட்டவற்றை துண்டித்து விட்டது.
போலீஸ் குவிப்பு
வியாழக்கிழமை இரவு இடத்தை காலி செய்யாவிட்டால் பலப்பிரயோகம் செய்ய வேண்டியிருக்கும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அதிக அளவு போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதையடுத்து அச்சமடைந்த விவசாயிகளில் கணிசமானோர் தங்கள் வாகனங்களில் வீடு திரும்ப ஆரம்பித்தனர். அப்போதுதான் பாரதிய கிசான் யூனியன் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகைத், செய்தியாளர்களை சந்தித்தார்.
கண்ணீர் விட்ட விவசாய சங்க தலைவர்
அவர் கூறுகையில், நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன். செய் அல்லது செத்துமடி என்பது தான் எனது கோஷம். தற்கொலை செய்துகொண்டாலும் செய்து கொள்வேன், ஆனால் இந்தப் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன். விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும். தண்ணீர் இல்லாவிட்டால் எனது சொந்த கிராமத்தில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து குடித்து எங்கும் போராட்டம் நடத்துவேன். குண்டர்களை வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். விவசாயிகளின் போராட்டத்திற்காக துப்பாக்கி குண்டுகளை ஏந்த நான் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார். அப்போது கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. இது பல்வேறு டிவி சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை பார்த்த விவசாயிகள் முன்பைவிட அதிக எழுச்சியோடு கூட்டம் கூட்டமாக வந்து அங்கு வந்து குவியத் தொடங்கிவிட்டனர்.
बिल वापसी ना होने पर आत्महत्या करने की धमकी दी राकेश टिकैत ने#KhojKhabar
— TezTV (@TezChannel) January 28, 2021
पूरी ख़बर: https://t.co/opiR58YgaM pic.twitter.com/v4rm8i7GKZ
ராகேஷ் திகைத் பேச்சு
இதனால் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்ற நிலைமை உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு ஏற்பட்டுவிட்டது. நேற்று இரவு முதல் கூட்டம் கூட்டமாக விவசாயிகள் காசிப்பூர் எல்லைக்கு வருகிறார்கள். ஒற்றை கண்ணீர் அத்தனை வலிமையாக விவசாயிகள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமையான இன்று கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரித்தபடி இருக்கிறது. இதனிடையே இன்று முசாபர் நகரில் நடைபெற உள்ள விவசாயிகள் பேரணியில் ராகேஷ் திகைத் உரையாற்ற உள்ளார். அவரது உரை மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.