நேதாஜிக்கு கவுரவம்.. இனி நேதாஜி பிறந்த நாளில் தொடங்கும் குடியரசு தின கொண்டாட்டம்.. முக்கிய முடிவு
டெல்லி: குடியரசு தின நிகழ்ச்சிகள் இனி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையும் உள்ளடக்கும் வகையில் ஜன 23 முதலே கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் கொடியேற்றுவார்.
மேலும், ஒவ்வொரு ஆண்டு குடியரசு தினத்தன்று நடைபெறும் முப்படைகளின் அணி வகுப்பும், மாநிலங்களின் பிரமாண்ட அணி வகுப்பும் நடைபெறுவது வழக்கம்.
அடுத்த 2 வாரம் ரொம்ப முக்கியம்.. கவனமா இருங்க.. தமிழ்நாடு அரசு தந்த எச்சரிக்கை.. என்ன காரணம்?
நேதாஜி
வழக்கமாக நமது நாட்டில் குடியரசு தின கொண்டாட்டங்கள் ஜனவரி 24ஆம் தேதி முதலே தொடங்கிவிடும். இந்தச் சூழலில் இந்த ஆண்டு முதல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளான ஜனவரி 23ஆம் தேதி முதல் குடியரசு தின விழா கொண்டாட்டங்களைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் மிக விரைவில் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23இல் பிறந்தவர்.
என்ன காரணம்
இந்தியாவின் கொண்டாட்டங்கள் அனைத்தும் நமது கலாசாரம் மற்றும் வரலாற்றையும் உள்ளடக்கி, அவற்றையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என நரேந்திர மோடி அரசு விரும்புவதாகவும் எனவே அதன் அடிப்படையிலேயே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளையும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
முக்கியமானவர்
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கியமான மற்றும் துணிச்சலான தலைவர்களில் ஒருவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒடிசாவின் கட்டாக் நகரில் பிறந்தவர். இந்திய விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய நேதாஜி, அதற்காக ஒரே ராணுவத்தையே கட்டமைத்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸைக் கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை கொண்ட இணையதளத்தையும் அவர் தங்கிய முக்கிய இடங்களையும் பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய நாட்கள்
நேதாஜியின் பிறந்த நாள் பராக்கிரம திவாஸ் (சாதனை நாள்) நாளாகக் கொண்டாடப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல ஆகஸ்ட் 14இல் பிரிவினை துன்ப தினம், அக்டோபர் 31இல் தேசிய ஒற்றுமை தினம் (சர்தார் படேலின் பிறந்த நாள்), நவம்பர் 15இல் ஜன்ஜாதியா கவுரவ் திவாஸ் (பிர்சா முண்டாவின் பிறந்த நாள்), நவம்பர். 26இல் அரசியலமைப்பு தினம், டிசம்பர் 26இல் வீர் பால் திவாஸ் (குரு கோவிந்த் சிங்கின் நான்கு மகன்களுக்கு அஞ்சலி) அனுசரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.