உயர் ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு.. நாளையே சட்டத் திருத்த மசோதா தாக்கல்?
டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதி வகுப்பினருக்கு, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யும் வகையிலான, சட்ட மசோதா லோக்சபாவில், செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் இப்போது வரை ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீடு முறைதான் அமலில் உள்ளது. ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, முதல் முறையாக பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யும் முடிவுக்கு வந்துள்ளது.
இட ஒதுக்கீடு நடைமுறைகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த முடிவை மத்திய அமைச்சரவை இன்று எடுத்துள்ளது.
ரூ.8 லட்சம், 5 ஏக்கர் நிலம்
இதன்படி பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்ஜாதி பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. வருடத்திற்கு 8 லட்சம் வரையிலான வருவாய் மற்றும் 5 ஏக்கருக்கு மிகாமல் நிலம் வைத்திருந்தால் அவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்று வகைப்படுத்தப்படுவார்கள் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அமல்படுத்துவது எப்படி
பல்வேறு ஜாதி பிரிவினருக்கும் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமலில் உள்ளது. எனவே மோடி அரசு அறிவித்துள்ள இந்த இட ஒதுக்கீட்டை எவ்வாறு செயல்படுத்தப்போகிறது என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
அரசில்சாசன திருத்தம்
இதனிடையே புதிதாக அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை அமல்படுத்த ஏதுவாக, அரசியல் சாசனத்தின் பிரிவு 15 மற்றும் 16 ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதையொட்டி அரசியல் சாசன திருத்த மசோதாவை மத்திய அரசு லோக்சபாவில், செவ்வாய்க்கிழமையே, தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குழப்பம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக தனது வாக்கு வங்கியான உயர் ஜாதியினரை குஷிப்படுத்த இவ்வாறு ஒரு முடிவுக்கு வந்துள்ளது என்று தெரிகிறது. இதன் மூலம், இட ஒதுக்கீடு நடைமுறையில் புது குழப்பம் உருவாகியுள்ளது என்பது மட்டும் உறுதி.