தலைவர்களுக்கு செய்வினையா.. அலறும் பெண் எம்பி.. எரிச்சலில் பாஜக தலைவர்கள்
Recommended Video
டெல்லி: மரணத்தை வெல்லும் மனிதன் இன்னும் பிறக்கவில்லை. காய்ஞ்சு போன பீடி போன்ற பாடி உடைய மனிதர் முதல் பாடி பில்டர் வரை அத்தனை பேரின் வாழ்க்கை புத்தகத்துக்கும் 'முடிவுரை' உறுதி. ஆனால் எந்த மாதிரியான சூழலில், ஏன் இறக்கிறார்கள்!? என்பதுதான் மேட்டரே.
அந்த வகையில், சர்வதேச அளவில் அரசியல் முக்கியத்துவத்தை பெற்றுவிட்ட பாரதிய ஜனதா கட்சியில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கணிசமான முக்கிய புள்ளிகள் மரித்துவிட்டனர். வாஜ்பாய், அருண் ஜெட்லி, சுஷ்மா, மனோகர் பரிக்கர்....என்று நீள்கிறது அந்த லிஸ்ட். தேசிய அரசியலில் முரட்டு மெஜாரிட்டியுடன் கோலோச்சும் பா.ஜ.க.வுக்கு, இந்த தொடர் மரணங்கள் மிகப்பெரிய மன உளைச்சலை தந்திருக்கின்றது.
இந்த நிலையில், பா.ஜ.க.வின் பெண் எம்.பி.யும், சந்நியாசியுமான பிரக்யா தாக்கூர் திடீரென ஒரு குண்டை போட்டுள்ளார். அதாவது "நமது இயக்கத்தின் அசுர வளர்ச்சி பலருக்கு பிடிக்கவில்லை. அதனால் நம் தலைவர்களுக்கு எதிர்க்கட்சியினர் சூனியம் வைத்துவிட்டனர்." என்பதுதான் அது.
6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் லிஸ்ட் தயார்..விரைவில் அறிவிப்பு!
பிரக்யாவின் இந்த குண்டானது தாறுமாறாக வெடித்துச் சிதறி பெரும் களேபரத்தை கிளப்பியிருக்கிறது பா.ஜ.க.வில். இந்த எம்.பி. இப்படி கிளப்பியிருப்பது பாஜக தலைமைக்கு பெரும் எரிச்சலையும், கடுப்பையும் கொடுத்திருக்கிறதாம். இயக்கத்தில் பல முக்கிய தலைகள் ஒவ்வொன்றாய் மறைந்திருக்கும் சோகத்தில் உள்ள நிலையில் இவர் இப்படிப் பேசியிருப்பது அவர்களுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது.
இருப்பினும் மறுபக்கம் பூஜை புனஸ்காரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். சூன்யம், செய்வினை என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டம் என்று மேடையில் பகுத்தறிவு பேசும் திராவிட இயக்கங்களின் தலைவர்களே, கொல்லைப்புறம் வழியே ஜோஸியர்களை அழைத்து வந்து பூஜை போட்டுக் கொள்ளும் தேசம் இது. அப்படி இருக்கையில் எடுத்ததுக்கெல்லாம் பூஜாரிகளை அழைக்கின்ற இயக்கமல்லவா பா.ஜ.க.
தாகூர் சொன்ன தகவல் அமித்ஷாவின் கவனத்துக்குப் போக, பா.ஜ.க. அலுவலகத்தில், இயக்க முக்கியஸ்தர்களின் நன்மைக்காக சிறப்பு யாகம், பூஜைகள் செய்துவிடலாமா? எனும் யோசனையில் இருக்கிறாராம்.
- ஜி.தாமிரா