370-வது பிரிவு நீக்கம் தொடர்பாக நீதிமன்றங்கள் தெரிவித்த கருத்துகள் என்ன?
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா என்பது குறித்தும் விவாதம் நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தது அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு. தற்போது இப்பிரிவு நீக்கப்பட்டிருப்பதன் மூலம் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதிதான் என்கிற நிலையை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். அதேநேரத்தில் 370-வது பிரிவு நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடரவே முடியாது என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
2015-ம் ஆண்டு 370-வது பிரிவு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் சில முக்கியமான கருத்துகளை தெரிவித்தது. அதில், 370-வது பிரிவு என்பது நிரந்தரமானது; இதை மாற்றவும் நீக்கவும் முடியாது என தெரிவித்திருந்தது.
அதே 2015-ல் 370-வது பிரிவு குறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அப்போது விசாரித்த தலைமை நீதிபதி தத்து, 370-வது பிரிவு விவகாரத்தில் நாடாளுமன்றம் மட்டும்தான் முடிவு எடுக்க முடியும். உச்சநீதிமன்றத்தால் இந்த விவகாரத்தில் தலையிடவே முடியாது என்றார்.
அத்துடன் 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம், 370-வது பிரிவு தற்காலிகமானது அல்ல எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறது. இதனால் 370-வது பிரிவை நீக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர இயலுமா? இயலாதா? என விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் நீதிமன்றம் தெரிவிக்க இருக்கும் கருத்து மிகவும் முக்கியத்துவமானதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.