பிரான்ஸ் டூ அம்பாலா...வருகிறது ரபேல் ஜெட் விமானம்...144 தடையுத்தரவு அமல்!!
டெல்லி: அரியானா மாநிலத்தில் அம்பாலா விமானப் படை தளத்திற்கு பிரான்சில் இருந்து ரபேல் ஜெட் போர் விமானங்கள் இன்று வந்து இறங்க இருப்பதால் அந்த இடத்தைச் சுற்றிலும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமானப்படை தளத்தில் இருந்து மூன்று கி. மீட்டர் தொலைவுக்கு தனியாரின் ட்ரோன் எதுவும் பறக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து துணை கமிஷனர் அசோக் சர்மா கூறுகையில், ''அம்பாலா விமானப் படை தளத்தைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமானப் படை தளத்தைச் சுற்றிலும் இருக்கும் துல்கோட், பால்தேவ் நகர், காமலா, பஞ்ச்கோரா ஆகிய கிராமங்களில் மக்கள் 4 அல்லது அதற்கு மேல் கூடக் கூடாது. அந்தப் பகுதியில் வீடியோ எடுக்கக் கூடாது. விமானப் படைத்தளத்தின் சுற்றுச் சுவர் அருகே நின்று கொண்டு புகைப்படங்கள் எடுக்கக் கூடாது. அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன'' என்றார்.
தெற்காசியாவில் இனி இந்தியாதான் மாஸ்.. ஜூலை 29ல் விமானப்படையில் இணைகிறது 5 ரபேல் போர் விமானங்கள்
ரபேல் ஜெட் சிறப்பு
ரபேல் ஜெட் விமானம் குறித்து அதிகாரிகள் தெரிவித்து இருக்கும் தகவலில், ''கடந்த திங்கள் கிழமை பிரான்சில் இருந்து ரபேல் ஜெட் விமானங்கள் புறப்பட்டுள்ளன. 7,000 கி. மீட்டர் பயணத்திற்குப் பின்னர் புதன் கிழமை (இன்று) அம்பாலா வந்து சேரும். அதற்கு முன்பாக எரிபொருள் நிரப்புவதற்கு மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு முறை நிறுத்தப்படும். இந்த ஜெட் விமானத்தில் மூன்று தனி இருக்கைகள், இரண்டு இரட்டை இருக்கைகள் இருக்கின்றன. விமானப் படை தளத்தில் இந்திய விமானப் படை தலைமை மார்ஷல் ஆர்கேஎஸ் பதவ்ரியா ஜெட் விமானங்களை வரவேற்பார்'' என்று தெரிவித்துள்ளனர்.
விளக்கு ஏற்ற வேண்டும்
அரியானா மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் இதுகுறித்து கூறுகையில், ''ரபேல் ஜெட் விமானங்கள் வருவதை அம்பாலா மக்கள் வீட்டுக்கு வெளியே தெருவுக்கு வந்து வரவேற்பார்கள்'' என்றார். அம்பாலா நகர பாஜக எம்.எல்.ஏ. அசீம் கோயல் கூறுகையில், ''இன்று மாலை 7 - 7.30 மணியளவில் ஜெட் விமானங்களை வரவேற்க வீடுகளில் விளக்குகளை ஏற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்'' என்றார்.
மிக் போர் விமானம்
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சில் இருந்து 59,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரபேல் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது. இந்திய விமானப் படையில் இந்த ஜெட் விமாங்கள் போர் யுத்திகளுக்கு பயன்படுத்தப்படும். மேலும் இது இந்திய விமானப் படையின் பலத்தை அதிகரிக்கும். தற்போது 5 ரபேல் ஜெட் விமானங்கள் விமானப் படையில் சேர்க்கப்படும். 1948 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த விமானப் படை தற்போது தொழில்நுட்ப ரீதியிலான கட்டமைப்பு விஸ்தரிக்கப்பட்டு கூடுதல் படைப்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குதான் மிக் 21 நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இங்கு மிராஜ் போர் விமானங்கள் இல்லை. பாகிஸ்தானில் இருக்கும் பாலகோட்டில் 2019ல் தாக்குதல் நடத்திய பின்னர் இங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
வானிலை மைய எச்சரிக்கை
அம்பாலாவில் இன்று மேகமூட்டம் இருப்பதால் விமானம் தரையிறங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது என்பது தெரிய வந்துள்ளது. லேசான மழை இருக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ரபேல் விமானம் தரையிறங்குவதில் எந்த சிரமமும் இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளது.