5 ஆண்டுகளில் பாஜக தலைவர் ஒருவர் மீதாவது அமலாக்கத்துறை வழக்கு போட்டதா? ப.சிதம்பரம் பொளேர் கேள்வி
டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு பாஜக தலைவர் மீதாவது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதா? என்று முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் பரிமாற்றத்தில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது என்பது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்த வழக்கு. இவ்வழக்கில் நேற்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் சுமார் 10 மணிநேரம் விசாரணை நடத்தியது அமலாக்கப் பிரிவு.

இந்த விசாரணைக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து இன்று 2-வது நாளாகவும் ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்கின்றனர். இன்றும் காங்கிரஸ் கட்சியினர் நாடு தழுவிய போராட்டம் நடத்துகின்றனர்.
டெல்லியில் நேற்று நடந்த போராட்டத்தின் போது போலீசார் தாக்குதல் நடத்தியதில் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் கை எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் போராட்டம் தொடர்பாக ப.சிதம்பரம் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
மத்தியில் ஆளும் பாஜக அரசு, சட்டத்தையோ ஜனநாயகத்தை மதிப்பது இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. கடந்த 4,5 ஆண்டுகளில் எந்த ஒரு பாஜக தலைவருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதா? எங்களுக்குப் போராட்டம் நடத்துகிற உரிமை உண்டு.
சட்டத்தை துச்சமாக மதிப்பதாலேயே நாங்கள் போராடுகிறோம். அமலாக்கப் பிரிவு சட்டத்தை மதித்து நடந்தால் எங்களுக்கு சிக்கல் எதுவும் இல்லை. அமலாக்கப் பிரிவு சட்டத்தை மதிப்பது இல்லை என்பதுதான் பிரச்சனை. நேஷனல் ஹெரால்டு வழக்கில் யார் மீது யார் எப்.ஐ.ஆர். போட்டது? எப்.ஐ.ஆர். நகலே தரவில்லையே.. இவ்வாறு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications