இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது நோவாவாக்ஸ் தடுப்பூசி.. 90% செயல்திறன் மிக்கது!
டெல்லி: நோவாவாக்ஸ் தடுப்பூசியை இந்தியாவில் அவரச கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கும்படி மத்திய மருந்து கட்டுப்பாடு வாரியத்திடம் சீரம் நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் கொரோனாவை ஒடுக்குவதற்கு தடுப்பூசி ஒன்றுதான் நிரந்தர தீர்வாகும்.
ஆரம்ப கட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டிய மக்கள் இப்போது ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளே மிகவும் பிரதானமாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி பற்றாக்குறையால் இந்தியாவில் மாதாந்திர தடுப்பூசி இலக்கை எட்ட முடியவில்லை.

நோவாவாக்ஸ் தடுப்பூசி
இந்த இரண்டு தடுப்பூசிகளை தவிர மாடர்னா தடுப்பூசி, ரஷ்யாவின் ஸ்பூட்னிக் ஆகிய நிறுவனங்களுடன் தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்திற்காக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நோவாவாக்ஸ் தடுப்பூசியை இந்தியாவில் அவரச கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கும்படி சீரம் நிறுவனம் மத்திய மருந்து கட்டுப்பாடு வாரியத்திடம் விண்ணப்பம் செய்துள்ளது.

90.4% செயல்திறன்
அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கு புனேவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீரம் நிறுவனம்தான் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தி செய்கிறது. சீரம் நிறுவனத்தில் தயாராக இருக்கும் நோவோவேக்ஸ் தடுப்பூசி 90.4 சதவிகிதம் அளவுக்கு கொரோனாவுக்கு எதிராக பலனளிக்கும் என்று சோதனையின்போது தெரியவந்தது. இதன் செயல் திறன் நன்றாக இருப்பதாக மத்திய அரசும் பாராட்டியது.

குழந்தைகளுக்கும் செலுத்தப்படும்
இந்தியா மட்டுமின்றி இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் நோவோவேக்ஸ் அவசர பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ''நோவோவேக்ஸ்
தடுப்பூசியை அக்டோபரில் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் செலுத்தப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சீரம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து ஆதரவிற்கும் அரசுக்கு நன்றி'' என்று சீரம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆதர் பூனாவல்லா கூறினார்.
Recommended Video

அமித்ஷாவுடன் சந்திப்பு
முன்னதாக ஆதர் பூனாவல்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. இதன்பின்னர் நிருபர்களிடம் பேசிய ஆதர் பூனாவல்லா, ' மத்திய அரசு எங்களுக்கு உதவுகிறது. நாங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை. அனைத்து ஒத்துழைப்புக்கும் ஆதரவிற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூறுகிறோம்' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications