பீகாரில் கட்சிகள் இணைப்பு! லால்பிரசாத்துடன் கரம் கோர்த்த சரத் யாதவ்
டெல்லி: பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் கட்சியில் இருந்து பிரிந்த சரத் யாதவ் லோக் தந்திரிக் ஜனதாதளம் கட்சியை துவக்கினார். தற்போது அவர் லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியுடன் தனது கட்சியை இணைந்தார்.
பீகாரில் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார்.
பாஜகவுடன் நிதிஷ்குமார் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள சரத் யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து கருத்து வேறுபாடு எழுந்து இருவரும் பிரிந்தனர்.
உ.பி தேர்தலில் பந்தயம் வைத்து.. பைக்கை இழந்த சமாஜ்வாதி தொண்டர்.. அகிலேஷ் யாதவ் தந்த சர்ப்ரைஸ்
புதிய கட்சி
ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருந்து வெளியேறிய சரத் யாதவ், 2018ல் லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியை துவக்கினார். கட்சி துவக்கினாலும் கூட அவரது கட்சி தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. இதனால் சரத் யாதவின் கட்சி பீகார் அரசியலில் ஜொலிக்கவில்லை. மேலும் லால் பிரசாத் யாதவ் கூட்டணியில் 2019 பாராளுமன்ற தேர்தலில் சரத் யாதவ் மாதேபுரா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பின் 2020ல் நடந்த சட்டசபை தேர்தலில் அவரது மகள் சுபாஷினி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
கட்சி இணைப்பு
இந்நிலையில் தான் தனது கட்சியை லால்பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியுடன் இணைக்க சரத் யாதவ் முடிவு செய்தார். இந்நிலையில் டெல்லியில் உள்ள சரத் யாதவ் இல்லத்தில் வைத்து தனது லோக் தந்திரிக் ஜனதாதளம் கட்சியை ராஷ்ட்ரீய ஜனதா கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ்(லாலுபிரசாத் மகன்) முன்னிலையில் அக்கட்சியில் இன்று இணைத்தார்.
எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு
இதுகுறித்து சரத் யாதவ் கூறுகையில், ‛‛தற்போதைய சூழலில் நாட்டில் வலுவான எதிர்க்கட்சிகள் தேவை. பழைய ஜனதாதள அமைப்பில் இருந்து பிரிந்த கட்சிகள் மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட பிற கட்சிகளை ஒன்றிணைக்க நான் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறேன். இந்த கட்சி இணைப்பு அதற்கான துவக்கப்புள்ளியாக இருக்கும். எதிர்கால தலைவராக தேஜஸ்வி யாதவ் இருப்பார். தற்போதைய சூழலில் இளம் தலைவர்கள் வேண்டும். ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி உங்களின் கட்சி. இதை பலப்படுத்த வேண்டும். இதற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். நம் போராட்டத்தை வலுவாக்குவது குறித்து அகிலேஷ் யாதவிடமும் பேசுவன்.லாலு பிரசாத்தும் ஒருநாள் சுதந்திரமாக நடப்பார். வகுப்புவாத சக்திகளுடன் அவர் சமரசம் செய்திருந்தால் நிச்சயம் சிறையில் இருந்திருக்க மாட்டார்'' என்றார்.
ஒன்றிணைவது அவசியம்
ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பீகார் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ் கூறும்போது, "நாடு முழுவதும், வெறுப்புணர்வு பரவுகிறது. சகோதரத்துவம் ஆபத்தில் உள்ளது. விலைவாசி உயர்வு ஒருபக்கம் இருக்க இந்திய அரசியலமைப்பின்படி செயல்படும் நிறுவனங்கள் கட்சி சார்ந்து செயல்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சரத் யாதவின் முடிவு (அவரது கட்சியை ஆர்ஜேடியுடன் இணைப்பது) எங்களுக்கு பலத்தையும் நம்பிக்கையையும் தருகிறது. மேலும் உதவியாக இருக்கும். வகுப்புவாத சக்திகளை விரட்டியடிக்க மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்'' என்றார்.
ராஜ்யசபா எம்பி
ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் ராஜ்யசபா எம்பி மனோஜ் ஜா கூறுகையில், "இந்த கட்சி இணைப்பு ராஷ்ட்ரீய ஜனதாதளத்தை பலப்படுத்துமா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு இந்த கட்சி சமூக நீதி அரசியலை நிச்சயம் வலுப்படுத்தும் என்பதை கூற விரும்புகிறேன்'' என்றார். இதற்கிடையே ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் சரத் பவார், ராஜ்யசபா எம்பியாக தேர்வாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒரே நேரத்தில் கட்சி
முன்னதாக கடந்த 1997 ல் பீகார் அரசியலில் லால் பிரசாத் யாதவ் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியை துவக்கினார். அப்போது நிதிஷ் குமார், சரத் யாதவ் ஆகியோர் இணைந்து ஐக்கிய ஜனதாதளம் கட்சியை துவக்கினர். மாநிலத்தில் இந்த 2 கட்சிகளுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவியது. மேலும் சரத் யாதவ் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக செயல்பட்டுள்ளார். 25 ஆண்டுக்கு முன்பு ஒரே நேரத்தில் இருவரும் தனித்தனியே கட்சி துவக்கி அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த நிலையில் தற்போது நண்பர்களாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.