பாடகர் மூஸ் வாலா கொலையில் சர்வதேச கனெக்ஷன்! நேபாளத்திற்கு பறந்த டெல்லி போலீஸ்! திடுக் திருப்பங்கள்
டெல்லி: பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சர்வதேச அளவில் இருக்கும் தொடர்புகள் அம்பலமாகத் தொடங்கி உள்ளது.
28 வயதான பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா கடந்த வாரம் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சித்து மூஸ் வாலா வெறும் பாடகர் மட்டுமில்லை. காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், கடந்த பஞ்சாப் தேர்தலில் வேட்பாளராகவும் போட்டியிட்டு இருந்தார்.

படுகொலை
இவர் கடந்த மே 29ஆம் தேதி பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கே என்ற இடத்தில் தனது ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென அவர் மீது சரமாரியா துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர் உயிரிழந்தார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது பெருந்திரளான ரசிகர்களும், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் அங்குத் திரண்டனர்.

தீவிர விசாரணை
பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு விஐபி கலாசாரத்தை ஒழிக்கிறோம் என்று கூறி இவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை வாபஸ் பெற்ற மறுநாளே இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சித்து மூஸ் வாலாவை கொலை செய்தவர்களைப் பிடிக்கும் பணிகளையும் போலீசார் தீவிரப்படுத்தினர். கொலையாளிகள் பயன்படுத்தி வாகனத்தைக் கண்டுபிடித்த போலீசார், அந்த வாரை வழங்கியதாக இரு நபர்களை ஃபதேஹாபாத்தில் வைத்து கைது செய்தனர்.

நேபாளம்
இந்நிலையில், டெல்லி போலீசின் சிறப்புப் பிரிவுக்குக் கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில், கொலையாளிகளைப் பிடிக்க நேபாளத்திற்கு விரைந்துள்ளனர். மான்சா மாவட்டத்தில் மூஸ் வாலாவை படுகொலை செய்த பின்னர், அவர்கள் இமயமலை அருகே நேபாளத்தில் பதுங்கி உள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்துள்ளனர். விரைவில் அங்கு வைத்து சிலர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

கனடா
இரு வேறு கேங்களுக்கு இடையே இருந்த மோதல் காரணமாக மூஸ் வாலா படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரித்தது. அப்போது அவர் கனடாவைச் சேர்ந்த கோல்டி ப்ரார் உள்ளிட்ட அவரது மூஸ்வாலாவை கொல்ல சதித்திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டார்.

பழிக்குப் பழி
இந்த கோல்டி ப்ரார் தான் ஏற்கனவே தனது பேஸ்புக் பக்கத்தில் மூஸ் வாலா படுகொலைக்குப் பொறுப்பு ஏற்று இருந்தார். கேங்ஸ்டர் விக்கி மிதுகேராவின் மரணத்திற்குப் பழிவாங்குவதற்காக மூஸ் வாலாவை கொன்றதாக கோல்டி ப்ரார் கூறினார். சித்து மூஸ் வாலா படுகொலையில் சர்வதேச தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், வரும் காலத்தில் விசாரணையில் மேலும் பல திருப்பங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications