யூடர்ன்.. 2 பதவிகளில் கார்கே?.. கதர் கட்சியில் வெடிக்கிறதா பூசல்.. அப்ப ராஜ்யசபா எதிர்கட்சி தலைவர்?
ராஜ்யசபா எதிர்கட்சி தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே தொடர்வார் என்கிறார்கள்
டெல்லி: ராஜ்யசபா எதிர்கட்சி தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே தொடர்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.. அதேசமயம், இன்றைய தினம் சோனியா காந்தி தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று நடக்க போவதால், காங்கிரஸில் எதிர்பார்ப்புகள் கூடிவருகின்றன.
நாடாளுமன்றம் ஒவ்வொரு 6 மாதத்திற்கு குறைந்தது ஒரு முறையாவது கூட வேண்டும் என்பது விதிமுறை.. அந்தவகையில் நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை மாதம் நடந்தது..
ஆனால், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும்... இந்த வருடம் ஹிமாச்சல பிரதேச மற்றும் குஜராத் சட்டசபைத் தேர்தல் காரணமாக இது தாமதமானது.
அமர்வு
இந்நிலையில், இந்த வருடத்திற்கான குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் முதல் வாரம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 7ம் தேதி தொடங்குகிறது. 7ம் தேதி தொடங்கும் கூட்டத்தொடர் டிசம்பர் 29ம் தேதி வரை 17 அமர்வுகளாக நடைபெற உள்ளது.. பொதுவாக, கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துவது மரபாக உள்ளது... இதில் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள், எதிர்க்கட்சிகள் கோரிக்கை, நிறைவேற்ற வேண்டிய மசோதாக்கள் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
சோனியா
இதனிடையே, இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சியின் ஒத்துழைப்பையும் மத்திய அரசு நாடியுள்ளது.. இதற்காக வரும் 6ம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, மக்களவை மற்றும் மாநிலங்களவை கட்சி தலைவர்களுக்கு அமைச்சர் பிரகலாத் ஜோஷி இதற்கான அழைப்பையும் விடுத்துள்ளார்...
ஜெய்ராம் ரமேஷ்
இந்தநிலையில் ராஜ்யசபா எதிர்கட்சி தலைவராக இருந்த மல்லுகார்ஜூன் கார்கே, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.. வருகிற 7ம் தேதி கூட்டத்தொடர் கூடஉள்ளநிலையில், கார்கே ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவராக தொடரலாம் என்று தகவல்கள் பரபரக்கின்றன. இதனிடையே, சோனியா காந்தி இன்றைய தினம், காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சியின் வியூகக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கார்கே, ஜெய்ராம் ரமேஷ், கேசி வேணுகோபால் போன்றோர் மட்டுமே இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு உள்ளார்களாம்..
ப.சிதம்பரம்
அதாவது, ராஜ்யசபாவில் கார்கேவுக்கு பதிலாக முன்னணியில் இருக்கும், திக்விஜய சிங் மற்றும் ப.சிதம்பரம் போன்ற சீனியர்கள் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை என்கிறார்கள்.. ஏற்கனவே, ஒருவருக்கு ஒரு பதவி விவகாரம் குறித்து ராகுல்காந்தி வலியுறுத்தி வரும் நிலையில், அநேகமாக இந்த கூட்டத்தொடர் முடிந்ததும் கட்சிக்குள் அது தொடர்பாக பூசல்கள் வெடிக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்... என்ன நடக்க போகிறது? தெரியவில்லை.. பார்ப்போம்..!!