நாட்டையே வென்றாலும் தென் இந்தியாவில் பாஜகவிற்கு ஷாக்தான்.. ஏபிபி சர்வே சொல்வதை பாருங்க #DeshKaMood
டெல்லி: லோக்சபா தேர்தலின்போது, தென் மாநிலங்களில் பாஜக கூட்டணிக்கு மிக குறைந்த இடங்கள்தான் கிடைக்கும் என்று ஏபிபி டிவி சேனல் நடத்திய சர்வே தெரிவிக்கிறது.
ஏபிபி (ABP) ஹிந்தி செய்தி தொலைக்காட்சி சேனல் 'தேசத்தின் மனநிலை' என்ற பெயரில் சி வோட்டர் அமைப்புடன் இணைந்து எடுத்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலையொட்டி இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்போது தேர்தல் நடைபெற்றால் யாருக்கு உங்கள் வாக்கு என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக பதில்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு
நாடு முழுக்க பாஜக கூட்டணியால் 300 தொகுதிகளை வெல்ல முடியும். காங்கிரஸ் கூட்டணி 116 தொகுதிகளையும்,
மூன்றாவது அணி அல்லது, பிற கட்சிகள் 127 தொகுதிகளை வெல்லும் என்று இந்த சர்வே கூறுகிறது. ஆனால் பாஜக கூட்டணி வேகத்தை, தென் மாநிலங்கள்தான் தடுக்கப்போகின்றன.
தென் மாநிலங்கள்
ஒவ்வொரு மாநிலத்தையும் தனித்தனியாக ஆய்வு செய்து கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ள இந்த டிவி சேனல், தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகியவற்றை ஒன்றிணைத்து தென் மாநிலங்களில் மொத்தம் 129 தொகுதிகள் இருப்பதாக கணக்கிட்டு கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.
|
20 தொகுதிகள்தான்
இதன்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தென்னிந்தியாவில் 20 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. நாட்டின் பிற மாநிலங்களோடு ஒப்பிட்டால் இது மிகமிகக் குறைந்த அளவாகும்.
மாநில கட்சிகள் ஆதிக்கம்
அதேநேரம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 34 தொகுதிகள் கிடைக்கும் என்று இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. இது தவிர பிற கட்சிகள் 75 தொகுதிகளில் வெல்லும் என்று இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. நாட்டின் பிற மாநிலங்களில் இது போல பிராந்திய கட்சிகள் இந்த அளவுக்கு அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பு கூறவில்லை. மேற்குவங்கத்தில் மட்டுமே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரசை விட அதிக தொகுதிகளை வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு தென்னிந்தியாவில்தான் பிராந்திய கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
தென் மாநிலங்கள்
பாரதிய ஜனதா கட்சிக்கு, மீண்டும் தென் மாநிலங்கள், சிம்மசொப்பனமாக மாறப்போகின்றன என்பதே இந்தக் கருத்துக் கணிப்பு சொல்லும் பாடம். இந்த கருத்துக்கணிப்பிலும்கூட, திமுக உள்ளிட்ட இப்போது காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பிராந்திய கட்சிகளை தனித்து பார்த்துதான், கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தும்பட்சத்தில், வாக்குகள் சிதறாமல் பாஜக கூட்டணிக்கு இன்னும் மிக மோசமான தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்பதுதான், இந்த கருத்துக்கணிப்பில் மற்றொரு சாராம்சம்.