சேலை அணிந்து வந்த பெண்ணுக்கு ஹோட்டலில் அனுமதி மறுப்பு.. ஊழியர்களை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள ஆகஸ்ட் கிராந்தி மார்க்கில் பிரபலமான தனியார் ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலுக்கு சேலை அணிந்து வந்த ஒரு பெண்ணை ஊழியர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்தனர் என்று சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானது.
அதாவது அகிலா என்று அழைக்கப்படும் பிரபலமான ஹோட்டலில் சேலை அணிந்து அந்த பெண் சென்றபோது, சேலை அணிந்து உள்ளே வரக்கூடாது என்று ஊழியர்கள் அவரிடம் கூறுகின்றனர்.
தழைய தழைய சேலை கட்டி.. மொட்டை மாடியில்.. சிலிர்க்க வைத்த நீலிமா!
சேலை அணியக்கூடாது
இதற்கு அந்த பெண், ''சேலை அணியக்கூடாது என்று ஆடை கட்டுப்பாடு உள்ளதா? எங்கே இது தொடர்பான விதிமுறையை எழுத்து பூர்வமாக காட்டுங்கள்'' என்று கூறுகிறார். அதற்கு ஹோட்டல் பெண் ஊழியர், '' நாங்கள் ஸ்மார்ட் கேஷுவலை மட்டுமே அனுமதிக்கிறோம், புடவை ஸ்மார்ட் கேஷுவலின் கீழ் வராது'' என்று கூறியபடி அங்கு இருந்து செல்கிறார். சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோவில் சேலை அணிந்து வந்த பெண்ணின் முகம் தெரியவில்லை.. அவர் குரல் மட்டுமே கேட்கிறது. அவருக்கு பதில் சொல்லும் பெண் ஊழியர் வீடியோவில் தெரிகிறார்.
கடும் கண்டனம்
இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்த அனிதா சவுத்ரி என்பவர், ''அகிலா உணவகத்தில் சேலை அனுமதிக்கப்படவில்லை, ஏனெனில் இந்திய சேலை இப்போது புத்திசாலித்தனமான ஆடை அல்ல. ஸ்மார்ட் ஆடையின் உறுதியான வரையறை என்ன, தயவுசெய்து சொல்லுங்கள். தயவுசெய்து புத்திசாலித்தனமான ஆடைகளை வரையறுக்கவும், அதனால் நான் புடவை அணிவதை நிறுத்திவிடுவேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகுபாடு
இதேபோல் ஹோட்டல் ஊழியர்கள் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது உயர் அதிகார முறையின் வெளிப்பாடு. மக்களை பிரிக்கும் பாகுபாடு என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக டுவிட்டரில் ஷெஃபாலி வைத்யா என்பவர் கூறுகையில், 'புடவை 'ஸ்மார்ட்' உடைகள்' அல்ல என்று யார் தீர்மானிப்பது? நான் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இங்கிலாந்தில் உள்ள சிறந்த உணவகங்களில் புடவைகளை அணிந்திருக்கிறேன். என்னை யாரும் தடுக்கவில்லை. அகிலா உணவகம் போன்ற சில இந்திய உணவகம் மட்டும் ஆடை கட்டுப்பாடு விதிப்பது ஏன்?'' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
ஹோட்டல் நிர்வாகம் விளக்கம்
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அகிலா ஹோட்டல், அந்த பெண் ஹோட்டலில் தகராறு செய்து ஊழியர் ஒருவரை அறைந்தார் என்று பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளது. இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ' ஒரு விருந்தினர்(அந்த பெண்) உணவகத்துக்கு தங்குவதற்காக வந்தார். அவரது பெயரில் முன்பதிவு இல்லாததால், வாயிலில் காத்திருக்குமாறு அவரை பணிவுடன் ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர். இருப்பினும் அவர் திடீரென உணவகத்திற்குள் நுழைந்து எங்கள் ஊழியர்களுடன் சண்டையிட செய்தார். ஒரு ஊழியரையும் அறைந்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் உள்ளன. எங்கள் ஹோட்டலில் அனைத்து ஆடைகளுக்கும் அனுமதி உண்டு. ஆடை கட்டுப்பாடு கிடையாது'' என்று தெரிவித்துள்ளனர். இரண்டு விதமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருப்பதால் யார் மீது தவறு இருக்கிறது? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.