கைதிகளின் தண்டனை குறைப்பு அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு: பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம்
டெல்லி: கைதிகளின் தண்டனைகளை குறைக்கும் அதிகாரம் அரசியல் சாசனப் பிரிவு 161-ன் கீழ் மாநில அரசுகளுக்கு இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக உறுதி செய்துள்ளது.
Recommended Video
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தம்மை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்ய கோரி முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முன்னதாக ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் முடிவு செய்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் ஆளுநர் வழியாக ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இத்தீர்மானத்தை ஜனாதிபதி அனுப்பாமல் கிடப்பில் போட்டிருந்தார்.
இதனை தமது விடுதலை வழக்கில் பேரறிவாளன் சுட்டிக்காட்டியிருந்தார். இதனால் ஒரு மாநில அரசின் தீர்மானத்தின் மீது ஏன் முடிவெடுக்காமல் ஆளுநர் இப்படி தாமதிக்கிறார் என உச்சநீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டிருந்தது. அத்துடன் இத்தீர்மானத்தின் மீது ஆளுநர் உரிய காலத்தில் முடிவெடுக்கவும் அவகாசம் கொடுத்தது.
இதன் பின்னர் கைதிகள் விடுதலை அல்லது தண்டனை குறைப்பு தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்றது உச்சநீதிமன்றம். அரசியல் சாசனத்தின் 432-வது பிரிவின் கீழ் சிபிஐ விசாரித்த வழக்குகள் கைதிகள் விடுதலை/ தண்டனை குறைப்பு அதிகாரத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை என வாதிட்டது மத்திய அரசு. ஆனால் ஏற்கனவே ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் இத்தகைய முடிவெடுகளை எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு; அது மாநில அரசுக்கான சிறப்பு அதிகாரம்; அதில் மத்திய அரசு தலையிட முடியாது என கூறப்பட்டுள்ளது என்றது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில் கடந்த 10 மாதமாக பரோலில் இருக்கு தமக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன; வீட்டு சிறையில் அடைக்கப்பட்டது போல் உள்ளேன். ஆகையால் இந்த வழக்கு இழுத்தடிக்கப்படும் நிலையில் ஜாமீனில் விட வேண்டும் என பேரறிவாளன் தரப்பு கோரிக்கை வைத்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது. முன்னதாக மத்திய அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போதும் கைதிகள் தண்டனை குறைப்பு அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்றது மத்திய அரசு. இதனை மீண்டும் நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் தலைமையிலான பெஞ்ச், அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் கைதிகள் தண்டனை குறைப்பு தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்கிற போது அதே அரசியல் சாசனத்தின் 432-வது பிரிவின் கீழ் கைதிகள் தண்டனை குறைப்பு அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டும் எப்படி கிடைக்கும் எனவும் கேள்விகள் எழுப்பினர். அத்துடன் கைதிகள் விடுதலை, தண்டனை குறைப்பு தொடர்பாக முடிவெடுக்க அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்.
1991 இல் ராஜீவ் படுகொலை முதல் பேரறிவாளனுக்கு ஜாமீன் வரை.. நடந்தது என்ன? 32 ஆண்டு கால பின்னணி!