சீன ஆக்கிரமிப்பு.. பெகாசஸ்.. இப்போ கொலீஜியமா? மோடி வொர்ஸ்ட்.. மக்களே உஷார்! சுப்பிரமணிய சாமி சுளீர்
டெல்லி: கொலீஜியம் அமைப்பு முறை குறித்து மத்திய அரசு தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், மக்கள் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் அமைப்பு முறையை மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.
கடந்த 2014ல் இந்த கொலீஜியத்திற்கு மாற்றாக 'தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்' நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டது.

மத்திய அரசின் நிலைப்பாடு
ஆனால் 2015ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த சட்டத்தை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அப்போது தொடங்கி தற்போது வரை கொலீஜியம் அமைப்பை மாற்ற வேண்டும் என பாஜக மேடைக்கு மேடை பேசி வருகிறது. இது குறித்து சமீபத்தில் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, "1993ம் ஆண்டு வரை நீதிபதிகள் நியமனம் என்பது சட்டத்துறை மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் நடைபெற்றது. அக்காலகட்டங்களில் நாடு சிறப்பான நீதிபதிகளை கொண்டிருந்தது. இதில் மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. அதாவது குடியரசுத் தலைவர்தான் நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும் என்பதுதான் அது.

விமர்சனம்
கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனத்தை நாட்டு மக்கள் எதிர்க்கின்றனர். அதேபோல தங்கள் சசோகதரர்களையே சக நீதிபதிகளாக நியமிப்பது இந்தியாவில்தான் நிகழ்கிறது. கொலிஜியம் அமைப்பால் அதில் இருக்கும் நீதிபதிகளின் பணிகள் பாதிக்கப்படுகின்றன. நீதிபதிகளுக்கு நீதியை வழங்குவதுதான் பிரதான பணி. தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாகவும், நன்கு பரிட்சியமான நீதிபதிகளை பதவி உயர்வுக்காகவும் கொலிஜியம் அமைப்பில் உள்ள நீதிபதிகள் பரிந்துரைக்கின்றனர். இது மிகவும் தவறான விஷயமாகும். தங்களுக்கு தெரியாதவர்களை அவர்கள் பரிந்துரை செய்வதில்லை. என்னுடைய விமர்சனம் என்பது நீதித்துறை மீதோ அல்லது நீதிபதிகள் மீதோ கிடையாது, நான் தற்போது நடைமுறையில் இருக்கும் கொலிஜியம் அமைப்பைதான் விமர்சிக்கிறேன்" என்று பேசியிருந்தார்.

ஆதரவு
இதற்கு காரணம் இருக்கிறது. அதாவது, 1993க்கு முன்பு வரை நீதிபதிகள் நியமனம் மத்திய அரசை சார்ந்திருந்த நிலையில் அதனை கொலீஜியம் அமைப்பு முறை அரசு கையிலிருந்து பிடுங்கியது. அதன் பின்னர் நீதிபதிகள் பெயரை கொலீஜியம் பரிந்துரைக்க, மத்திய அரசு ஓகே மட்டும் சொல்லி வந்தது. இதில் மத்திய அரசின் பங்கு ஓகே சொல்வது மட்டும்தான். மத்திய அரசால் புதிய பெயர்களை பரிந்துரைக்க முடியாது. அதேபோல புதியதாக தன்னிச்சையாக நீதிபதிகளை நியமிக்கவும் முடியாது. எனவேதான் மத்திய அரசு இந்த அமைப்பை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. ஆனால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி விதிவிலக்காக கொலீஜியத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

கண்டனம்
இந்நிலையில் சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமித்து கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் மத்திய அரசு இதில் இரண்டு பேருக்கு மட்டுமே ஒப்புதல் அளித்தது. இதே போன்று கடந்த காலத்தில் மத்திய அரசு செய்திருக்கிறது. இப்படி கடந்த 2021ம் ஆண்டு கொலீஜியம் பரிந்துரைத்த 11 நீதிபதிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து இது நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு கடந்த 7ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு வாய்மொழியாக கண்டனம் தெரிவித்தனர்.

ஆபத்து
இதனை சுட்டிக்காட்டிய சுப்பிரமணிய சுவாமி "கொலீஜியம் விவகாரத்தில் மக்கள் உச்சநீதிமன்றம் பக்கம் நிற்க வேண்டும். பிரதமர் மோடி ஏற்கெனவே ஊடகங்களை நீர்த்து போக செய்துவிட்டார். நம்முடைய நிலத்தை சீனாவின் ஆதிக்கத்திற்கு விட்டுவிட்டார். பெகாசஸ் மூலம் நம்முடைய தனிப்பாதுகாப்புக்கு குந்தம் ஏற்படுத்தியுள்ளார். இப்போது இல்லையென்றாலும் எப்போது அமலானாலும் அவசர நிலை என்பது ஆபத்தானதுதான்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications