ராம்சேது பற்றி பொய் தகவல்.. அக்ஷய் குமார் படத்துக்கு எதிர்ப்பு.. வழக்கு தொடரும் சுப்பிரமணியசாமி
டெல்லி: நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள ‛ராம்சேது' படத்தில் ராம்சேது(ராமர்பாலம்) பற்றி தவறான சித்தரிப்பு உள்ளதாகவும், இதனால் வழக்கு தொடர இருப்பதாகவும் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் இந்தி மொழியில் உருவாகும் படம் ராம் சேது. நடிகையாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்கிறார். படத்தை அபிேஷக் சர்மா இயக்கி வருகிறார்.
இந்த படத்தை கர்மா மீடியா எனும் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் தீபாவளியையொட்டி அக்டோபர் மாதம் 24ம் தேதி வெளியீட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒற்றுமைய கவனிச்சீங்களா? இங்க ரஜினிகாந்த்.. அங்க அக்ஷய் குமார்
ராம்சேது படத்தின் போஸ்டர்
இந்நிலையில் படத்தை பிரபலப்படுத்துவதற்கான பணியை தயாரிப்பு நிறுவனம் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ‛ராம்சேது' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. ராம்சேது (ராமர்பாலம்) உண்மையானதா அல்லது கட்டுக்கதையா என்பதை கண்டுபிடிக்கும் வகையிலான தொல்பொருள் ஆய்வு அடிப்படையில் கதைக்களம் இருப்பதாக கூறப்படுகிறது.
கிளம்பிய சர்ச்சை
இதற்கிடையே தான் தற்போது ‛ராம்சேது' படம் குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. படத்தில் ராமர் பாலம் குறித்து பொய்யான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக தான் பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமியும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகருக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக அறிவித்துள்ளார்.
வழக்கு தொடர முடிவு
இதுதொடர்பாக சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், "ராம்சேது தொடர்பான தவறான சித்தரிப்பால் இழப்பீட்டுக்கான வழக்கு தொடர்பாக எனது கூட்டாளியான சத்ய சபர்வாலுடன் ஆலோசனை செய்துள்ளேன். கர்மா மீடியா மற்றும் நடிகர் அக்ஷய் குமார் ஆகியோரின் படத்தில் ராமர் பாலம் பற்றி பொய்யாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்காக வழக்கு தொடரப்பட உள்ளது. நடிகர் அக்ஷய் குமார் வெளிநாட்டவராக இருந்தால் அவரை கைது செய்து இந்தியாவில் இருந்து வெளியேற்றும்படி கேட்டிருப்போம்'' என கூறியுள்ளார். இதன்மூலம் விரைவில் வழக்கு தொடரப்பட உள்ளது உறுதியாகி உள்ளது.
தேசிய சின்னமாக அறிவிக்கும் வழக்கு
தமிழகத்தில் ராமேஸ்வரம் பாம்பன் தீவுகளுக்கும் இலங்கைக்கும் இடையே சுண்ணாம்பு கற்களால் ஆன திட்டுகள் தொடர்ச்சியாக உள்ளன. இது ஆதாம் பாலம் என அழைக்கப்படும் நிலையில் புராணங்கள் அடிப்படையில் இது ராமர், அணில் மற்றும் அனுமான் உதவியுடன் கட்டிய ராமர் பாலம் என்ற கருத்தும் உள்ளது. முன்னதாக இந்த பகுதியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அரசு சார்பில் 2007ல், சேதுசமுத்திர திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு சுப்பிரமணியசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்த நிலையில் திட்டம் தடைப்பட்டது. மேலும் ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக மத்திய அரசு அறிவிக்க உத்தரவிடவேண்டும் என சுப்பிரமணியசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இது விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. .