எம்எல்ஏ சட்டையை பிடித்து தரதரவென இழுத்து சென்ற மக்கள்.. டெல்லி ஷாக்.. உறைந்து போன ஆம் ஆத்மி
டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் வரும் 4ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஒருவர் கட்சி தொண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், உள்ளாட்சி தேர்தலில் 'தொகுதிகளை' வேட்பாளருக்கு விற்பனை செய்து வருவதாக ஆம் ஆத்மி மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இதனால்தான் சொந்த கட்சியினரே எம்எல்ஏ மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்றும் பாஜக விமர்சித்திருக்கிறது. ஆனால் ஆம் ஆத்மி இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது.
அதிமுக அவுட்டாம்..! காங்கிரஸ் தான் இப்போ 2வது பெரிய கட்சி.. சொல்வது திருநாவுக்கரசர்!
தாக்குதல்
டெல்லியில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நான்காவது முறையும் பாஜக தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டுள்ளது. மட்டுமல்லாது இந்த தேர்தலில் உள்ளாட்சி தொகுதிகளை வேட்பாளர்களுக்கு பணத்திற்காக ஆம் ஆத்மி விற்பனை செய்வதாக பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில்தான் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவில், டெல்லி 'மட்டியாலா' தொகுதி சட்டமன்ற உறுப்பினர் 'யாதவ்' மீது தாக்குதல் நடத்தப்படுவது தெளிவாக தெரிகிறது. சம்பவம் குறித்து 'ஆம் ஆத்மி' கட்சியினர் கூறுகையில், "எம்எல்ஏ யாதவ் இரவு 8 மணியளவில் ஷியாம் விஹாரில் கட்சித் தொண்டர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தி கொண்டிருந்தார். இந்த கூட்டத்தில் ஒரு பிரச்னை தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டது.
விமர்சனம்
இந்த சலசலப்பு கடும் விவாதமாக உருவெடுத்தது. பின்னர் கை கலப்பில் முடிந்தது. பலர் எம்எல்ஏவை கடுமையாக தாக்கினர். அவரது சட்டை காலரை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றனர். ஆனால் எதனால் இந்த பிரச்னை வெடித்தது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை" என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பாஜக கூறுகையில், "உள்ளாட்சி தொகுதிகளை வேட்பாளர்களுக்கு பணத்திற்காக ஆம் ஆத்மி விற்பனை செய்கிறது" என்று விமர்சித்துள்ளது. இது குறித்து பாஜக தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான சம்பித் பத்ரா இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை பகிர்ந்து மேற்குறிப்பிட்ட விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
மறுப்பு
ஆனால் ஆம் ஆத்மி எம்எல்ஏ யாதவ் இதனை மறுத்துள்ளார். "பாஜக வெறி பிடித்தது போல பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறது" என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் பாஜக இதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. இது குறித்து பாஜகவின் பத்ரா கூறுகையில், "ஆம் ஆத்மி ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.80,000 வரை கேட்கிறது. இப்படியாக 110 தொகுதிகளுக்கு கட்சி பேரம் பேசியுள்ளது" என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த அரவிந்த் கெஜ்ரிவால், "பாஜக ஒவ்வொருநாளும் ஒரு புனைவு கதைகளை பரப்பி வருகிறது. டெல்லியில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக என்ன செய்தது என்று மக்கள் கேட்கிறார்கள். அதேபோல குஜராத் போனால், கடந்த 27 ஆண்டுகளாக மக்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்கிறார்கள். இதற்கு பாஜகவினரிடம் பதில் இல்லை. இதுதான் பாஜக" என்று கூறியுள்ளார்.
பாஜக
டெல்லியில் பாஜகவுக்கு எதிராக ஆம் ஆத்மி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. மாநகரில் உள்ள குப்பைகளை முறையாக அகற்றுவது, அதேபோல மாநகராட்சி ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியத்தை வழங்குவது என ஆம் ஆத்மி 10 வாக்குறுதிகளை இந்த தேர்தலில் முன் வைத்துள்ளது. அதேபோல பாஜகவை பொறுத்த அளவில், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு(EWS) அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி வழங்க இருக்கிறார். இதனை தேர்தல் பிரசாரத்தில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என முடிவெடுத்துள்ளது. இப்படியாக பாஜகவின் சாதனைகளை கட்சி பட்டியலிட்டு வைத்திருக்கிறது. டெல்லி உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 4ம் தேதி நடைபெறுகிறது. இதன் முடிவுகள் டிசம்பர் 7ம் தேதி அறிவிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.