சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களை கிடப்பில் போடலாம்.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி பரிந்துரை
டெல்லி: சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களை கிடப்பில் போடுமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. விவசாயிகள் மற்றும் அரசு பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து இந்த விவகாரத்தை தீர்த்துக் கொள்ளவும் யோசனை வழங்கியுள்ளது நீதிமன்றம்.
இந்த வழக்கு விடுமுறைகால அமர்வு முன்னிலையில் அடுத்து விசாரணைக்கு வரும் என்று தெரிவித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, இன்றைய வழக்கு விசாரணையின்போது விவசாய சங்கங்கள் தரப்பில் பிரதிநிதிகள் இல்லை என்பதால் உத்தரவை பிறப்பிக்க முடியாது என தெரிவித்தார்.
விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 23வது நாளை எட்டியுள்ளது.
வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க இயலுமா... மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரபரப்பு கேள்வி
தலைமை நீதிபதி அமர்வு
இதுவரை மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை. விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நிறைய மனுக்கள் பல தரப்பினரால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
கிடப்பில் போடலாம்
அப்போது பாப்டே கூறியதாவது: அரசுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி அரசு தனது நிலையை தெரிவிக்க வேண்டும். இப்போதைக்கு புதிதாக நிறைவேற்றப்பட்ட விவசாய சட்டங்களை கிடப்பில் போடலாம். சுப்ரீம் கோர்ட் குளிர்கால விடுமுறையில் செல்ல உள்ளதால், விவசாயிகள், விடுமுறை கால அமர்வு முன்பு முறையிடலாம்.
குழு ஏற்படுத்தப்பட வேண்டும்
விவசாய நிபுணர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டு, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். நாங்களும் இந்தியர்கள்தான். விவசாயிகள் கஷ்டம் என்ன என்பது எங்களுக்கும் புரியும். தற்போது நடைபெற உள்ள போராட்டத்தை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள். ஒரு குழுவை அமைத்து ஆலோசிக்கலாம், வழக்கு தொடரலாம், இப்படி ஆக்கப்பூர்வமாக செயல்களில் ஈடுபட உரிமை உள்ளது.
போராட்டம் தொடரலாம்
கமிட்டி தனது பேச்சுவார்த்தையை ஒருபக்கம் நடத்தட்டும், நீங்கள் போராட்டத்தை அமைதியாக நடத்திக்கொள்ளலாம். பாரதிய கிசான் சங்கம் மற்றும் பிற விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், சாய்நாத் போன்றோர் விவசாய குழுவில் இடம் பெறலாம். சாலைகளை தடுக்காமல் விவசாயிகள் போராட்டத்தை தொடருவதில் சட்டத் தடைகள் எதுவும் கிடையாது. இவ்வாறு போப்டே தெரிவித்தார்.