நீட் தேர்வு வழக்கு- மீண்டும் வாய்தா கேட்ட தமிழக அரசு- இது என்ன குடோனா? என சீறிய உச்சநீதிமன்றம்
டெல்லி: நீட் தேர்வு தொடர்பான வழக்கில் தமிழக அரசு மீண்டும் 6 மாத கால வாய்தா வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கேட்டது. தமிழக அரசின் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. மேலும் ரிட் மனுக்களை கிடப்பிலேயே வைத்திருக்க உச்சநீதிமன்றம் ஒன்றும் குடோன் அல்ல என்றும் நீதிபதிகள் கடுமையாக கூறினர்.
நீட் தேர்வை கட்டாயமாக்கியது மத்திய பாஜக அரசு. இந்த நீட் தேர்வுக்கு எதிராக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக அரசு 2020-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
இந்த நிலையில் அதிமுக அரசு தொடர்ந்த ரிட் மனுவில் சில திருத்தங்களை மேற்கொண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்தது. இதனையடுத்து தமிழக அரசின் நீட் வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இந்த ரிட் மனு மீது உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் விசாரணை நடத்திய போது தமிழக அரசு வாய்தா கேட்டதால் 3 மாதங்களுக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது தமிழக அரசின் சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி ஆஜரானார். உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம், தமிழக அரசின் நீட் தேர்வுக்கு எதிரான மசோதா இன்னமும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஆகையால் நீட் தேர்வு வழக்கு விசாரணையை மேலும் 6 மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் அமித் ஆனந்த் திவாரி.
ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதனை ஏற்க மறுத்தனர். மேலும் பொதுவாக ரிட் மனுக்களை நீண்டகாலம் கிடப்பில் போட முடியாது. ரிட் மனுக்களை கிடப்பில் போடுவதற்கு இது குடோனும் அல்ல.
பொதுவாக ஆளுநர், ஜனாதிபதி ஆகியோரை காரணம் காட்டினால் அதில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. அதனால் ரிட் மனுவை தள்ளுபடி செய்யத்தான் வேண்டும். ஆகையால் 4 வார காலத்துக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர். இதனையடுத்து பிப்ரவரி மாதம் நீட் தேர்வு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் அதிமுக இபிஎஸ் கோஷ்டி இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கையில்,ட் தரவரிசைப் பட்டியல் வெளிவர உள்ள நிலையில் வழக்கை நடத்தாமல் வாய்தா கேட்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இச்செயல் தமிழக மாணவர்களின் மேல் திமுக அரசின் பொறுப்பற்ற தன்மையை வெளிக்காட்டுகிறது. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்திட்டு நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வோம் எனவும் அதற்கான வழிமுறை தங்களுக்கு மட்டுமே தெரியும் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்தது திமுக. இந்த முறையாவது மூத்த வழக்கறிஞர்களை நியமித்து நீட் வழக்க்கை வெற்றிகரமாக நடத்தி, நீட் நுழைவுத் தேர்வு சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதிமுகவினருக்கு எதிராக பொய் வழக்குகளை போடுவதற்கு செலவிடும் நேரத்தில் ஒரு சிறு பகுதியையாவது நீட் வழக்குக்காக ஒதுக்கி தமிழக மாணவர்களுக்கு ஒரு விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.