சனாதன ஒழிப்பு மாநாடு.. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
டெல்லி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம். சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
ஜெகநாதன் உள்ளிட்ட 3 பேர் தொடர்ந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி பெல்லா திவேதி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னையில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது என்றும், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல ஒழிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றோடு சனாதன தர்மத்தை ஒப்பிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதும், பாஜக மற்றும் இந்துத்வா அமைப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு வலுத்தது.
நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தபோதும், தான் பேசிய கருத்தில் உறுதியாக இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்துக்கு எதிராக பல மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதற்கிடையே, ஜெகநாதன் உள்ளிட்ட 3 பேர், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்கு எதிராக ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். உதயநிதி ஸ்டாலினின் பேச்சு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கவும், உதயநிதி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும் கோரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி பெல்லா திவேதி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு எதிரான ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. ரிட் மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து, வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications