விவசாயிகளுக்கு போராட முழு உரிமை உண்டு.. ஆனால் இந்த செயலை ஏற்க முடியாது.. உச்சநீதிமன்றம் கண்டனம்!
டெல்லி: மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது.

பெரும்பாலான சாலைகள் முடக்கம்
ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக உள்ளனர். டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் விவசாயிகள் சாலைகளை மறித்து போராடுகின்றனர். இதனால் டெல்லியில் இருந்து அண்டை மாநிலங்களை இணைக்கும் பெரும்பாலான சாலைகள் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத்தில் மனு
இதற்கிடையே நொய்டாவை சேர்ந்த ஒருவர், ' விவசாயிகள் முக்கியமான சாலைகளை பிளாக் செய்து போராடுகின்றனர். அண்டை மாநிலங்களுக்கு செல்லும் சாலைகள் முடக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். போராட்டக்காரர்களை சாலைகளில் இருந்து அகற்ற உத்தரவிட வேண்டும்' என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

உரிமையை நாங்கள் எதிர்க்கவில்லை
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ''விவசாயிகளுக்கு போராட்டம் நடத்த உரிமை உண்டு ஆனால் காலவரையின்றி சாலைகளைத் தடுக்க முடியாது. விவசாயிகள் போராட்டத்தில் இறுதியில் சில தீர்வு காணப்பட வேண்டும். சட்டரீதியான சவால் நிலுவையில் இருந்தும் கூட அவர்களின் எதிர்ப்புக்கான உரிமையை நாங்கள் எதிர்க்கவில்லை.

சாலைகளை முடக்குவதை ஏற்க முடியாது
ஆனால் சாலைகளைத் தொடர்ந்து பிளாக் செய்வதை ஏற்க முடியாது. பிரச்சினைக்கு நீதித்துறை வடிவம், போராட்டம் அல்லது பாராளுமன்ற விவாதங்கள் மூலம் தீர்வு காணலாம். ஆனால் நெடுஞ்சாலைகளை தடுப்பதன் மூலம் எப்படி தீர்வு காண முடியும்? என்று தெரிவித்தனர். இது தொடர்பாக விவசாயிகளின் சங்கங்களுக்கு மூன்று வாரம் கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம் வழக்கின் விசாரணையையை டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.












Click it and Unblock the Notifications