ஒரே ஒரு அறிவிப்பில் மோடி அதிரவைத்த பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்கு-உச்சநீதிமன்றத்தில் அனல் விவாதம்!
டெல்லி: மத்திய பாஜக அரசின் பணமதிப்பிழப்புக்கு நடவடிக்கைக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் இன்று விசாரித்து வருகிறது. ஆனால் உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் இவ்வழக்கை விசாரிக்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி இரவு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையில் புழக்கத்தில் இருந்த ரூ500, ரூ1,000 நோட்டுகள் இனி செல்லாது என திடீர் என அறிவித்தார். கறுப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையாக புதியதாக ரூ2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவித்தார் மோடி. அத்துடன் வங்கிகள், ஏடிஎம்-களில் பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.
முடங்கிய தேசம்
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த இந்திய தேசத்தையே முடக்கிப் போட்டது. பொதுமக்கள் தங்களிடம் இருந்த பணத்தை மாற்றவும் வங்கிகள், ஏடிஎம்-களில் பணத்தை எடுக்கவும் பல மணிநேரம் நீண்ட வரிசைகளில் நிற்க வேண்டிய அவலம் ஏற்பட்டது. இப்படி வரிசைகளில் நின்று நூற்றுக்கணக்கில் மாண்டும் போயினர். பிரதமர் மோடி, ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து 6 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் கறுப்பு பண மீட்பு நடவடிக்கை என்னவாயிற்று என்பது எதிர்க்கட்சிகளின் கேள்வி.
உச்சநீதிமன்றத்தில் வழக்குகள்
இந்த நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. அப்போது இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டிஎஸ் தாக்கூர், பணமதிப்பிழப்பு என்பதற்கான அரசின் நோக்கம் பாராட்டுக்குரியது. மத்திய அரசின் பொருளாதார கொள்கையில் தலையிட முடியாது. மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்கள் குறித்து கவலை தெரிவிக்கிறோம் என்றார்.
அரசியல் சாசன் பெஞ்ச்
இதனைத் தொடர்ந்து பணமதிப்பிழப்பு விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்தது. அப்போது இதர உயர்நீதிமன்றங்களில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணைக்கும் தடை விதித்தது உச்சநீதிமன்றம். ஆனால் மத்திய அரசின் இந்நடவடிக்கையில் சட்ட பிழைகள் உள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியதால் அரசியல் சாசன பெஞ்ச் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
மத்திய அரசுக்கு உத்தரவு
உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையின் போது, இதுபோன்ற வழக்குகளை அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க தேவையில்லை. தனிநபர்களின் பாதிப்புக்கு நிர்வாக ரீதியாக தீர்வு காணலாம் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இன்றைய விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரமும் ஆஜரானார். இன்றைய விசாரணைகளின் முடிவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு, ரிசர்வ் வங்கி விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.