"இதெல்லாம் உங்க ஒரு நாள் செலவுக்கே போதாது.." வருமான வரித்துறையை கண்டித்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி: ரூ.1.5 லட்சம் வழங்குவது தொடர்பாக வருமான வரித்துறை சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்த நிலையில், சிறிய தொகைக்காக உச்ச நீதிமன்றத்தை அணுகுவது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், மனுவில் குறிப்பிட்டுள்ள தொகையை விட நீதிமன்றத்தில் ஆஜராகும் செலவு அதிகமாகவே இருக்கும் என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.
நமது நாட்டில் தீர்ப்பாயங்களோ அல்லது கீழமை நீதிமன்றங்களோ அளிக்கும் உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்கள். அதிலும் குறிப்பாக அரசு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் எல்லாம் சிறு தொகைக்கே கூட மேல்முறையீடு செய்யும்.

சுப்ரீம் கோர்ட்: அப்படி தான் கல்கத்தா ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து வழக்கு ஒன்றில் வருமான வரித்துறை சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்திருந்தது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பி வி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்த நிலையில், அப்போது தான் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தார்.
சின்ன சின்ன தொகை தொடர்பான வழக்குகளுக்கும் கூட மேல்முறையீடு என்று அதிக செலவை ஏற்படுத்தும் வழக்குகளைத் தாக்கல் செய்வது ஏன் என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. மேலும், உச்ச நீதிமன்றத்தை அணுகும் போது வழக்கறிஞர் பொறுப்புடன் அணுக வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியிருக்கிறார்.
யாராவது பொறுப்பேற்க வேண்டும்: இது குறித்து நீதிபதி கண்ணா மேலும் கூறுகையில், "இதற்கு யாராவது பொறுப்பேற்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டை அணுகுவதற்கு முன் பொறுப்புடன் இருக்க வேண்டும். இவ்வளவு சிறிய தொகைக்கு ஏன் இந்த மேல்முறையீட்டு வழக்கு என்று புரியவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் இத்தனை வழக்குகள் தேங்கி இருக்க வருமான வரி தான் காரணம்.
ஒரு நாள் செலவே அதிகம்: இந்த மேல்முறையீட்டு மனுக்களுக்கு எவ்வளவு செலவு செய்கிறீர்கள்? உச்ச நீதிமன்றத்தில் இது போன்ற மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஒரு நாள் ஆஜராகவே உங்களுக்கு அதிக செலவாகுமே" என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்..
சிறு வழக்குகளுக்கும் அரசு நிறுவனங்கள் மேல்முறையீடு செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. இதனால் அரசுக்குச் செலவு அதிகம் ஆவதுடன், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கிடைப்பதிலும் தாமதம் ஆகிறது. இதனால் இதில் தெளிவாக வழிகாட்டுதல்களை அரசு வெளியிட வேண்டும் எனப் பலரும் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் இந்த கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ரூ. 1.5 லட்சம் தொடர்பாக தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பைக் கல்கத்தா உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது. இருப்பினும், அதை எதிர்த்தே சுப்ரீம் கோர்ட்டில் வருமான வரித்துறை மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை நிராகரிக்கும் போதே நீதிபதிகள் இந்த கருத்துகளைத் தெரிவித்தனர். குறிப்பிட்டனர்.












Click it and Unblock the Notifications