கொரோனா காலத்தில் கைதிகளை விடுதலை செய்த நடைமுறை என்ன.. மாநிலங்களிடம் அறிக்கை கேட்கிறது உச்சநீதிமன்றம்
டெல்லி: கொரோனா காலத்தில் சிறையில் இருந்து கைதிகளை விடுதலை செய்தபோது, எந்த மாதிரி நடைமுறை பின்பற்றப்பட்டது என்பது பற்றி ஐந்து நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியதன் காரணமாக, கடந்த மே மாதம் 7ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான உத்தரவை பிறப்பித்தது . அதன்படி சிறைகளில் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு சில கைதிகளை சிறையில் இருந்து வீட்டுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது .

கடந்த வருடம் ஜாமீன் அல்லது பரோல் மூலமாக வீட்டுக்கு சென்ற கைதிகளுக்கு இந்த விதிமுறை பொருந்தும்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜரானார். தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் மற்றும் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது . அப்போது நீதிபதிகள் கூறுகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு மறுபடி இந்த வழக்கு விசாரணைக்கு வந்து இருக்கிறது. எனவே, எந்த மாதிரி நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர் என்ற விபரம் எங்களுக்கு தெரியவில்லை. எனவே அனைத்து மாநிலங்களும் இது தொடர்பாக அடுத்த ஐந்து நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஏற்கனவே உச்சநீதிமன்றம் சொன்ன படி விடுதலை செய்யப்பட்டுள்ள கைதிகளை சரணடையுமாறு சிறைத்துறை இப்போதைக்கு வற்புறுத்தக் கூடாது. உச்ச நீதிமன்றம் அடுத்த உத்தரவை பிறப்பிக்கும் வரை இந்த நிலை தொடர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications