அதிமுக வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று என்ன உத்தரவு பிறப்பிக்குமோ? திகிலில் இபிஎஸ், ஓபிஎஸ் கோஷ்டிகள்!
டெல்லி: அண்ணா திமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்றம் இன்றைய விசாரணையின் போது என்ன உத்தரவை பிறப்பிக்கும் என்பதில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு பதைபதைப்புடன் காத்திருக்கிறது.
அதிமுகவானது ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு கோஷ்டிகளாக பிளவுபட்டுள்ளது. இதில் இபிஎஸ் கோஷ்டி ஜூலை 11-ந் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டியது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹைகோர்ட் உத்தரவு
இப்பொதுக்குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11-ந் தேதி இபிஎஸ் கோஷ்டி நடத்திய பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து இபிஎஸ் கோஷ்டி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், இபிஎஸ் கூட்டிய பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர்.

ஓபிஎஸ் அப்பீல்
இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இதனால் இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் தங்களையும் கேட்டு உத்தரவு பிறப்பிக்க கோரும் கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றம் அண்மையில் இவ்வழக்கை விசாரித்தது.

உச்சநீதிமன்றம் தடை
அன்றைய விசாரணையின் போது, இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் உள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தலை ஏன் நடத்த அவசரம் காட்டப்படுகிறது? அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கெய்ஷனா முராரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது. மேலும் இபிஎஸ் தரப்பு பதில் மனுத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

இன்று மீண்டும் விசாரணை
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில், இபிஎஸ் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஓபிஎஸ்ஸை மிக கடுமையாக விமர்சித்துள்ளனர். அதில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் எனக்கு ஆதரவாக உள்ளனர். ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு அற்பமானது. அவர் அதிமுக பொதுக்குழு நடத்ததான் தடை கேட்டார். அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எந்த தடையும் கேட்கவில்லை. ஆகையால் ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டு மனுக்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பதில் மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications