'மதுரைக்காரனை' மகிழ்வித்த முதல்வர் ஸ்டாலின்..குடியரசு தலைவருக்கு அளித்த சூப்பர் புத்தகம்..டிரெண்டிங்
டெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் The Multiple Facets of My Madurai என்ற புத்தகத்தை அன்பளிப்பாக அளித்தார். இந்நிலையில், மதுரைக்காரனான எனக்கு இதைவிட மகிழ்வான செய்தி என்ன இருக்க முடியும் என சு வெங்கடேசன் எம்பி ட்வீட் செய்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூன் 17ஆம் தேதி முதல்முறையாகத் தலைநகர் டெல்லி சென்றிருந்தார்.
அப்போது பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். மேலும், தமிழ்நாட்டிற்குத் தேவையான கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவையும் பிரதமர் மோடியிடம் அளித்தார்.

ஸ்டாலின்
இந்நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் டெல்லி சென்றார். அவர் இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்தார். ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற பிறகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

சந்திப்பு
அப்போது தமிழ்நாடு சட்டசபையின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்கக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். மேலும், சட்டசபையில் கருணாநிதியின் உருவப்படத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதில் கலந்து கொள்ளக் குடியரசுத் தலைவர் சம்மதம் அளித்ததாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும், அப்போது புத்தகம் ஒன்றையும் குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் அன்பளிப்பாக அளித்தார்.

அன்பளிப்பு
முதல்வர் ஸ்டாலின் மதுரை வடக்கு மாசி வீதி தொடர்பான The Multiple Facets of My Madurai என்ற புத்தகத்தைத் தான் குடியரசுத் தலைவருக்கு அளித்தார். இந்தப் புத்தகம் குறித்த தகவல்கள் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்தப் புத்தகத்தை மனோகர் தேவதாஸ் எழுதி, வரைந்துள்ளார். இதனை மதுரை மக்கள் இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

மதுரை எம்பி சு வெங்கடேசன்
இது குறித்து மதுரை எம்பி சு வெங்கடேசன் தனது ட்விட்டரில், "இன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்த தமிழ்நாடு முதல்வர் மனோகர் தேவதாஸின் நூலான The Multiple Facets of My Madurai எனும் நூலினை அளித்துள்ளார். மதுரைக்காரனான எனக்கு இதைவிட மகிழ்வான செய்தி என்ன இருக்க முடியும்? மாமதுரையின் அழகை மனோவின் ஓவியத்தின் வழியே காண்பது பேரனுபவம்" என பதிவிட்டுள்ளார். இவர் மட்டுமின்றி பலரும் The Multiple Facets of My Madurai புத்தகம் குறித்த தகவல்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

புத்தகம்
இந்தப் புத்தகத்தை எழுதி வரைந்தவர் மனோகர் தேவதாஸ். பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள இவர், எனது மதுரை நினைவுகள், தி கிரீன் வெல்ஸ் இயர்ஸ், மல்டிபிள் பேக்ட்ஸ் ஆஃப் மை மதுரை உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இந்த The Multiple Facets of My Madurai புத்தகம் கலைநயமிக்க மதுரை கோயில்கள் மற்றும் புராதன கட்டடங்களின் படங்களை உள்ளடக்கியது.

மேகதாது அணை
கர்நாடகாவில் காவேரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு முயல்கிறது. இதற்காகப் பிரதமர் மோடியைக் கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேரிலேயே சந்தித்து வலியுறுத்தினார். இந்த நேரத்தில் தமிழ்நாடு முதல்வர் டெல்லி சென்று குடியரசுத் தலைவரைச் சந்தித்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

முதல்வர் பளீச்
குடியரசுத் தலைவர் உடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின்,"மேகதாது அணை விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சரும் பிரதமர் மோடியும் உறுதி அளித்துள்ளனர். இதில் கர்நாடகா அரசுடன் பேசவோ, ஆலோசனை நடத்தவோ எதுவும் இல்லை. பிரதமரும் நீர்வளத்துறை அமைச்சரும் உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என நம்புகிறோம்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications