தஞ்சை மாணவி தற்கொலை: போலீசார் நியாயமாக விசாரிக்கவில்லை- தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
டெல்லி: தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை விசாரித்து வரும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்.,) மூன்று பேர் கொண்ட குழு, தங்கள் விசாரணை அறிக்கையை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.,க்கு அனுப்பியுள்ளது. தங்கள் விசாரணையின் போது பல விசாரணை நடைமுறை குறைபாடுகளை குழு கவனித்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆதாரங்களை குலைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவியின் மரணத்துக்கு கட்டாய மதமாற்றமே காரணம் என பள்ளி நிர்வாகம் மீது புகார் கூறப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர், தஞ்சாவூரில் நேற்றும் சிபிஐ அதிகாரிகள் பல இடங்களில் விசாரணை நடத்தினர்.
இதனிடையே தேசிய குழந்தைகள் நல ஆணையம் தங்கள் விசாரணை அறிக்கையை தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அனுப்பியது. அதில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. என்சிபிசிஆர் அறிக்கையில், தமிழக காவல்துறை, மதமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளை புகாராக பதிவு செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது. மதமாற்ற முயற்சிதான் லாவண்யா தற்கொலைக்குக் காரணம் என்று குடும்பத்தார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை: சிபிஐ குழு திருச்சி வருகை! வார்டன் சகாய மேரியிடம் விசாரிக்க திட்டம்
உயிரிழந்த மாணவியின் பள்ளிக் கட்டணத்தை முழுவதுமாக செலுத்தாத வரை, லாவண்யாவின் தாயார் தனது மகளின் சடலத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
என்சிபிஆர் தனது அறிக்கையில் மேலும் கூறுகையில், "இந்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணையைத் தொடங்க 3545 கோரிக்கை புகார்கள் வந்தன.
சிறுமியின் மரணம் தொடர்பாக, நிலைமையின் தீவிரம் மற்றும் மாநில அதிகாரிகளின் மெத்தனமான நிலைப்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, NCPCR தலைவர் பிரியங்க் கனூங்கோ, ஆலோசகர் (கல்வி) மதுலிகா ஷர்மா, காத்யாயணி ஆனந்த், ஆலோசகர் (சட்டம்) தலைமையிலான 3 அதிகாரிகள் குழு 2022 ஜனவரி 30 மற்றும் 31 தேதிகளில் தஞ்சாவூருக்கு சென்று முழுமையாக விசாரணை நடத்தினர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பு மாணவியான லாவண்யா தற்கொலை செய்துகொண்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மைக்கேல்பட்டில் உள்ள சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப் பள்ளிக்கு என்சிபிசிஆர் குழுவினர் சென்றபோது, குழந்தைகள் தங்குவதற்கு தனி அறைகளோ, தங்கும் வசதிகளோ இல்லை என்பது தெரியவந்தது. மேலும், உயிரிழந்த சிறுமி தங்கியிருந்த அறை சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், மரச்சாமான்கள், புத்தகங்கள், உடைகள் மற்றும் குழந்தைகளின் உடமைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அகற்றப்பட்டதாகவும், சாட்சியங்கள் கலைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடம், உள்ளூர் காவல்துறையினரால், விசாரணை நோக்கத்திற்காக சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படவில்லை என்பதை குழு கவனித்துள்ளது. குற்றச் செயல் நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் தற்போதைய நிலவரத்தைப் பார்க்கும்போது, போதுமான சட்ட நடைமுறைகள் இல்லாததால் சாட்சியங்கள் சிதைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக முடிவுக்கு வந்துள்ளதாகவும் என்சிபிஆர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
லாவண்யாவின் தற்கொலை வழக்கைக் கையாள்வதில் காவல்துறை அலட்சியமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், விசாரணை அதிகாரி (IO) மற்றும் காவல் கண்காணிப்பாளர் (SP) ஆகியோருடனான உரையாடலின் போது, போர்டிங்கின் வார்டனை அதாவது முதன்மைக் குற்றவாளியாகப் பெயரிடப்பட்டவரை, குற்றச் சம்பவத்தை மீண்டும் உருவாக்கவும், சாட்சியங்களைக் கைப்பற்றவும் குற்றம் நடந்த இடத்திற்கு காவல்துறையினர், அழைத்துச் செல்லவில்லை, என்பதை அறிந்து கொண்டோம் என்று என்சிபிஆர் குழு தெரிவித்துள்ளது.
"விசாரணை அதிகாரிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை விதிகளுக்கு பொருந்தவில்லை என்பது கவனிக்கப்பட்டது. விசாரணை அமைப்பு நியாயமான விசாரணையை நடத்துகிறதா இல்லையா என்ற சந்தேகத்தை இது உருவாக்குகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறுமி பற்றிய முக்கிய விவரங்களை மறைக்க அதிகாரிகள் முயற்சி செய்கிறார்கள், அதே நேரத்தில் சிறுமியை கிறிஸ்தவ மதத்திற்கு மாற நிர்பந்திக்கப்பட்டதைப் பற்றி விசாரணை நடத்த குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோளையும் புறக்கணித்துள்ளார்கள். சிறார் நீதிச் சட்டம், 2015-ன் கீழ் செல்லுபடியாகும் வகையில் பதிவு செய்யாமல் பள்ளி விடுதி நடத்தப்பட்டுள்ளது.
NCPCR வழங்கிய பரிந்துரைகள்:
என்சிபிசிஆர் அறிக்கை தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) சில பரிந்துரைகளை முன் வைத்துள்ளது.
உரிய பதிவு இல்லாமல் பள்ளிக் குழந்தைகளை தங்கவைத்த போதிலும், JJ சட்டம், 2015ன் படி நடவடிக்கை எடுக்கத் தவறிய மாவட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு தேவையான ஆலோசனை, இழப்பீடு மற்றும் உதவி வழங்குதல் வேண்டும்.
தமிழ்நாடு விடுதி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்கள் ஒழுங்குமுறை சட்டம் 2014 மற்றும் சிறார் நீதிச் சட்டம், 2015 ஆகியவற்றின் கீழ் இதுபோன்ற எத்தனை நிறுவனங்கள் செயல்படுகின்றன என்பதை விசாரித்து, அவற்றின் பட்டியலை NCPCR க்கு வழங்க வேண்டும்.
உரிய நடைமுறையைப் பின்பற்றி மேற்படி இடத்தில் வசிக்கும் அனைத்து குழந்தைகளையும் உடனடியாக மாற்ற வேண்டும்.
டிஜிபிக்கு:
உரிய விசாரணை மற்றும் நியாயமான விசாரணையை மேற்கொள்ளாத மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த என்சிபிசிஆர் அறிக்கையில், தஞ்சை பள்ளி மாணவி மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை என்று ஒன்இந்தியா தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது. அது பேஸ்புக் மாதிரி சமூக வலைத்தலங்களிலும் ஷேர் செய்யப்பட்டிருந்தது. ஆனால், "மாணவி லாவண்யா தற்கொலைக்கான காரணங்கள் மற்றும் சாட்சிகள் பற்றிய போலீஸ் விசாரணை ஆகியவற்றில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு நியாயமானதாக இல்லை; தவிர, கட்டாய மதமாற்றம் இதற்கு காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படவில்லை," என்றுதான் NCPCR அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, என்று Fact Crescendo அமைப்பு கண்டறிந்து கூறிய பிறகு, அந்த தவறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.