தொழில் நிறுவனங்கள் வருமான வரி தணிக்கை தாக்கல் செய்ய அக்டோபர் 7ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு
டெல்லி: தொழில் நிறுவனங்கள் 2021-2022-ம் ஆண்டுக்கான வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழில் நிறுவனங்கள் வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கொடு நேற்றுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வருமானவரி இணையதளத்தில் பல பிரச்சனைகள் எழுந்தன. இதன் காரணமாக, காலக்கெடுவை நீட்டிக்க சார்ட்டட் அக்கவுண்டன்ட்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கைகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்றுக்கொண்டது.
அதன்படி, தொழில் நிறுவனங்கள் 2021-2022-ம் ஆண்டுக்கான வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வருமான வரி செலுத்தும் நிறுவனங்கள், தங்கள் கணக்கை சார்ட்டட் அக்கவுண்டன்ட் மூலம் தணிக்கை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த தணிக்கை பிரிவு 44பி-ன் கீழ் நடைபெறுகிறது.
2022-23 மதிப்பீட்டு ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நேரடி வரிகள் வாரியம் கூறியிருந்தது. தணிக்கை அறிக்கையை காலக்கெடுவுக்குள் உருவாக்காவிட்டால், அபராதம் செலுத்த வேண்டும். வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 271பி-ன் படி, தாமதத்திற்கு மொத்த விற்பனை, வருவாய் அல்லது மொத்த வணிக ரசீதுகளில் 0.5 % அல்லது ரூ.1.5 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம்.
இந்நிலையில், வருமான வரி இணையதளம் செயல்படவில்லை என பயனர்கள் சமூக ஊடகங்களில் குற்றம்சாட்டி வந்தனர். கடைசி தேதியான நேற்று மாலை மத்திய நேரடி வரிகள் வாரியம், ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில், தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதில் வரி செலுத்துவோர் மற்றும் பிறர் பிரச்சனைகளை எதிர்கொண்டதை கவனத்தில் ஏற்று, 2022-23 மதிப்பீட்டு ஆண்டிற்கான பல்வேறு தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை, வரும் 7-ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் இந்த முடிவுக்கு, வருமான வரித்துறைக்கு, சார்ட்டட் அக்கவுண்டன்ட்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நோட்டீஸ்.. ஏ.ஆர். ரகுமானுக்கு எதிரான ஆதாரம் இருக்கு.. மத்திய அரசு பதில்