டெல்லி-பெங்களூர்.. டேக் ஆப் செய்யும் போது விமானத்தில் பற்றி எரிந்த தீ.. அச்சத்தில் உறைந்த பயணிகள்
டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு 184 பேருடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் டேக் ஆப் செய்யும் போது தீப்பிடித்ததால் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
உள்நாட்டு, சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் இந்த விமான நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை தருகின்றனர்.

184 பேருடன்..
பயணிகளை டிராப் செய்ய வரும் வாகனங்கள், பிக் அப் செய்ய வரும் வாகனங்கள் என விமான நிலையத்திற்கு வெளியிலும் பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இருக்காது. இந்த நிலையில், டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு 184 பயணிகளுடன் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான 6E-2131- புறப்பட தயாராக இருந்தது. இரவு 9.45 மணியளவில் விமானம் கிளம்புவதற்காக தயாராக நின்றது.

திடீரென பற்றி எரிந்த தீ
விமானம் டேக் ஆப் செய்யும் திடீரென விமானத்தின் என்ஜினில் தீ பிடித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமான பயணிகள் மத்தியிலும் அச்சம் ஏற்பட்டது. எனினும் சில வினாடிகளில் இந்த தீ அணைந்துவிட்டது. விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் சுமார் 11 மணியளவில் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தின் என்ஜின் பகுதியில் தீப்பிடிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

தீப்பிழம்புகளை நான் பார்த்தேன்
இது தொடர்பாக விமானத்தில் பயணித்த பயணியான பிரியங்கா குமார் என்பவர் கூறுகையில், ''5 முதல் 7 செக்கண்டுகளுக்குள் விமானம் டேக் ஆப் ஆகியிருக்கும். அப்போது விமானத்தின் இறக்கை பகுதியில் தீப்பிழம்புகளை நான் பர்த்தேன். உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது. என்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக விமானி தெரிவித்தார். விமானம் பார்க்கிங் பே பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. நாங்கள் பயணிக்க இண்டிகோ நிறுவனம் மாற்று விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தது'' என்றார்.

இண்டிகோ நிறுவனம் விளக்கம்
விமானத்தின் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீயால் பயணிகள் மத்தியில் பெரும் குழப்பமும் பீதியும் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதவது:- "டெல்லியில் இருந்து பெங்களூருவிற்கு இயக்கப்படும் விமானம் (6E2131) டேக் ஆப் செய்யும் நேரத்தில் என்ஜின் பழுதடைந்தது. இதனால் டேக் ஆப் செய்வது நிறுத்தப்பட்டது.

இணையத்தில் பரவும் வீடியோ
விமானம் பத்திரமாக பார்க்கிங் பே பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அனைத்து பயணிகளும் பத்திரமாக மாற்று விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக நாங்கள் வருந்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் டேக் ஆப் செய்ய ரன்வேயில் வேகமாக செல்லும் போது தீப்பொறிகள் ஏற்படும் காட்சிகளை பயணிகள் தங்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இது தொடர்பான பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தலைநகர் டெல்லியில் இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications