மக்கள் பாதுகாப்பு தான் முக்கியம் - முல்லைபெரியாறு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை நிர்வாகம் தொடர்பான நிகழ்வுகளுக்குள் தலையிட விரும்பவில்லை எனக் கூறியுள்ள உச்சநீதிமன்றம் இந்த வழக்கை இரு தரப்பினரும் வழக்காக கருதக் கூடாது எனவும் கீழ்நிலையில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் முக்கியம் என கூறியுள்ளது.
கேரளாவில் உள்ள பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள முல்லைப் பெரியாறு அணை தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் ஜீவாதாரமாக உள்ளது. மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்கிறது இந்த அணை.
இந்த நிலையில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பற்றது எனவும் அதனை இடிக்க வேண்டும் என கேரளா பல ஆண்டுகளாக கூறி வருகிறது. அதே நேரத்தில் அணை உறுதியாக உள்ளதாகவும் அணையின் பாதுகாப்பு குறித்து எந்த அச்சமும் தேவையில்லை என தமிழக அரசு கூறி வருகிறது.

நீதிமன்றம் உத்தரவு
அனைத்து தொடர்பாக இரண்டு சட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் இரண்டு வழக்குகளிலும் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்புகள் வழங்கப்பட்டன. 2014ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் அணையின் நீர் மட்டத்தை 142 அடியை விட 3 அடி குறைவாக அதாவது 139 அடிக்கு மேல் அணையின் நீர்மட்டம் இருக்கக் கூடாது என கேரள அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக பராமரிக்க உச்சநீதிமன்றம் தற்காலிக உத்தரவு பிறப்பித்தது.

கேரள அரசு
தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபரில் கேரள அரசு தாக்கல் செய்த மனுவில் மாநிலத்தில் இடைவிடாத மழை பெய்து நீர்க்கட்டு நீர் மட்டம் உயர்ந்ததால் கருத்தில் கொண்டு மீண்டும் அணையின் நீர்மட்டத்தை குறைக்க கேரள அரசு நீதிமன்றத்தில் முறையிட்டது 120 ஆண்டுகள் பழமையான இந்த அணை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும் அதை அகற்றி விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

அணையால் பாதுகாப்பில்லை
முல்லைப் பெரியாறு அணை பாதிப்புக்கு உள்ளான கீழ் பகுதியில் அமைந்துள்ள இடுக்கி அணையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மேலும் இரண்டு அணைகளும் சேர்ந்து பாதிப்பை உருவாக்கினால் 50 லட்சம் மக்களின் உயிர்கள் மற்றும் சொத்துக்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டிருந்தது.

தமிழக அரசு விளக்கம்
இந்த வழக்கு தொடர்பாக பதிலளித்த தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் 2014-ஆம் ஆண்டு தீர்ப்பின்படி அணை நீர் தேக்கத்தை 142 அடியாக உயர்த்துவது தடுக்கும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அணை பாதுகாப்பற்றது என போலியான பிரச்சனையை எழுப்புவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று நடந்த விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி கேரளாவின் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளித்தார்.

மக்களின் பாதுகாப்பு
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள் இது இரு தரப்புக்கு இடையேயான ஒரு விரோத வழக்கு அல்ல எனவும், அணியின் நிர்வாகம் குறித்து விவாதிக்க தாங்கள் இங்கு உட்காரவில்லை எனவும் இது மக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பொதுநல வழக்கு என்பதால் தான் நாங்கள் இங்கு இருக்கிறோம் என்று கூறினர். மேலும் அணையின் நீர் மேலாண்மை மற்றும் அணையின் நீர்வரத்து தொடர்பான சிக்கல்களை நிபுணர் குழு ஆய்வு செய்யும் என்றும், அணை நிர்வாகத்துக்கு நீதிமன்றம் செல்லாது எனவும் நீதிபதி தெரிவித்தனர்.

கூட்டு கூட்டம்
இதையடுத்து பல்வேறு தரப்பினரின் கூட்டு கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு உத்தரவிட்ட நீதிமன்றம், கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒருமித்த கருத்து மற்றும் கருத்து வேறுபாடுகள் குறித்து தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் பிப்ரவரி 4 ஆம் தேதிக்குள் வழக்கறிஞர்கள் தங்கள் எழுத்துப்பூர்வ குறிப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் விசாரணையை ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications