இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு முழு தடை வராது.. மத்திய அரசு பிளான் வேற.. வெளியான தகவல்கள்!
டெல்லி: இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு முழுமையாக தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காது, அதற்கு பதில், கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், நாடாளுமன்றத்தில் வரும் குளிர்கால கூட்டத்தொடரில் புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கிரிப்டோகரன்சி வணிகம் தொடர்பாக வரி விதிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டிஜிட்டல் நாணயங்கள் தொடர்பான சிக்கல்களை ஆய்வு செய்வதற்கும், கிரிப்டோ நாணயங்கள் தொடர்பான குறிப்பிட்ட நடவடிக்கைகளை முன்மொழிவதற்கும் மத்திய அரசு குழுவை அமைத்திருந்தது.
சுற்றி சுற்றி ஆட்டம் போட்ட அக்ஷரா- வருண்...அசந்து போன ரசிகர்கள்
தடை பரிந்துரை
இந்த நிலையில்தான் கிரிப்டோகரன்சிக்கு இந்தியாவில் தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகின.
அதேநேரம், லோக்சபா இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின் படி, கிரிப்டோகரன்சி மசோதா, சில விதிவிலக்குகளுடன், இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளையும் தடை செய்ய வாய்ப்புள்ளதாகவும், அரசால் வழங்கப்படும் எந்த வெர்ச்சுவல் கரன்சிகளையும் தவிர அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளும் இந்தியாவில் தடைசெய்ய, அமைச்சகங்களுக்கு இடையிலான குழு பரிந்துரைத்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.
பிட் காயின்
இருப்பினும், இந்தியாவில் கிரிப்டோகரன்சி மீது மொத்தமாக தடை இருக்காது என்று இந்த துறை வல்லுநர்கள் நம்புகின்றனர். "பிட்காயினின் சந்தை மதிப்பு $1 டிரில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. பல ஆண்டுகளாக இது ஒரு ஊக சந்தையாக இருந்து இப்போது மதிப்பு சந்தையாக மாறியுள்ளது. ஒப்புமையின்படி, பிட்காயின் ஒரு சொத்தாக கருதப்படும்," என்று உலகளாவிய கிரிப்டோ முதலீட்டு தளமான Mudrex இன் CEO மற்றும் இணை நிறுவனர் எடுல் படேல் தெரிவித்துள்ளார்.
வரி விதிக்க வாய்ப்பு
இந்தியாவில் தற்போது கிரிப்டோகரன்சிகளுக்கு வரி விதிக்கப்படவில்லை, ஆனால் வரி செலுத்துவோர் கிரிப்டோவில் முதலீடு செய்வதன் மூலம் தங்களுக்கு கிடைக்கும் ஆதாயங்களை அறிவிக்க புதிய மசோதா வகை செ்யயும். கிரிப்டோகரன்சி மீதான வரிவிதிப்பு தொடர்பான விதிகள் மற்றும் விதிமுறைகள் இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளன, மேலும் அது உறுதியான வடிவத்தை எடுப்பதற்கு இன்னும் சிறிது நேரம் எடுக்க வாய்ப்புள்ளது. அதன்பிறகு கிரிப்டோகரன்சிகளுக்கும் வரி போட வாய்ப்புள்ளது.
வரி விகிதம்
இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளின் வரிவிதிப்பு குறித்து, பிளாக்செயின் மற்றும் கிரிப்டோ அசெட்ஸ் கவுன்சிலின் (BACC) உறுப்பினர் Kristin Boggiano கூறுகையில், "36 மாதங்களுக்கும் மேலாக வைத்திருக்கும் கிரிப்டோகரன்சிகளில் இருந்து பெறப்படும் ஆதாயங்கள் நீண்ட கால மூலதன ஆதாயங்களாக வகைப்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இருப்பினும், குறுகிய காலத்தில் நீங்கள் பெறும் ஆதாயங்கள் குறுகிய கால ஆதாயங்களாக வகைப்படுத்தப்படும். இந்தியாவில் கிரிப்டோ முதலீடு எவ்வளவு பிரபலமானது, அரசாங்கத்தின் நிகர மதிப்பில் அதன் தாக்கம், ரூபாய் மாற்று விகிதங்கள் மற்றும் சர்வதேச மதிப்புகள் மீதான தாக்கம் போன்ற பல காரணிகளைப் பொறுத்து இந்த ஆதாயங்களின் வரி விகிதம் மாறுபடும்." என்று தெரிவித்தார்.
இளைஞர்களை கெடுக்கும் வழிகள்
சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் கிரிப்டோகரன்சி நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். கிரிப்டோகரன்சிகள் மீதான ஒழுங்குமுறைகளை யோசித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் முன்பே குறிப்பிட்டிருந்தன. கூட்டத்திற்குப் பிறகு, தொழில்துறையில் உள்ள பல்வேறு நபர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறுவதற்காக நிதி தொடர்பான நாடாளுமன்றத்தின் நிலைக்குழு கூடியது. கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, பேசுகையில், கிரிப்டோகரன்சி அல்லது பிட்காயினை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவதும், நமது இளைஞர்களை கெடுக்கக்கூடிய தவறான கைகளுக்கு அது போய்விடாமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம் என்று தெரிவித்திருந்தார்.