"ஏலியன் இன்வேஷன்" எப்போது வேண்டுமானாலும் நடக்கும்! அந்த 4 கிரகங்கள் ரொம்ப டேஞ்சர் தான்.. பகீர் ஆய்வு
டெல்லி: பூமியின் மீது ஏலியன் இன்வேஷன் நடத்த வாய்ப்புள்ளது குறித்து புதிய ஆய்வு முடிவுகள் பகீர் கிளப்பும் வகையில் அமைந்துள்ளது.
நமது இந்த பால்வெளி மண்டலம் குறித்து அறிந்து கொள்ள உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அண்டத்தில் நமது பூமியைத் தவிர வேறு கிரகங்களிலும் மனிதர்கள் வாழ வாய்ப்புள்ளது என்பதே ஆய்வாளர்களின் எண்ணம்!
இதனால் அண்டத்தில் இருக்கும் வேற்று கிரக வாசிகளைத் தொடர்பு கொள்ளும் முயற்சியிலும் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் நாசா கூட மனிதர்களின் புகைப்படம் உள்ளிட்டவற்றை பால்வெளி மண்டலத்தில் அனுப்பி இருந்தது.

4 கிரகங்கள்
இதற்கிடையே புதிய ஆய்வு ஒன்று பகீர் முடிவுகளைக் கொடுத்துள்ளது. அதாவது இந்த பிரபஞ்சத்தில் குறைந்தது குறைந்தது 4 கிரகங்கள் பூமிக்கு எதிராக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இவை பூமி மீது ஏலியன் இன்வேஷன் எனப்படும் போரை நிகழ்த்தும் வாய்ப்பு மிகக் குறைவு என்று ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகின்றனர். ஆல்பர்டோ கபல்லெரோ என்பவர் தான் இந்த ஆய்வை நடத்தி உள்ளார். ஸ்பெயினை சேர்ந்த இவர் தான் கடந்த 1977ஆம் ஆண்டிலேயே ஏலியன்களிடம் இருந்து வாவ் என்ற மெசேஜ் வந்ததாகவும் தெரிவித்து இருந்தார்.

பயணம்
ஒரு மனித நாகரீகமாக, நாம் பால்வெளியில் அருகில் உள்ள வேறு கிரகங்களுக்கு இடையே பயணம் செய்யும் திறன் கொண்ட ஒரு நாகரீகமாக மாறியவுடன் அந்த கிரகங்கள் மீது தாக்குவோம் அல்லது படையெடுப்போம் என்றும் இதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்றும் ஆல்பர்டோ கபல்லெரோ கூறுகிறார். இப்படி பால்வழி மண்டலத்தில் பல்வேறு கிரகங்களுக்கு இடையே பயணிப்பதில் நிபுணத்துவம் பெற்ற சில கிரகங்களும் வேற்றுகிரகவாசிகளும் ஏற்கனவே இருக்கக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.

இல்லாமல் இருக்கலாம்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இப்போது நம்மிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வை தயார் செய்தேன். வேற்று கிரக வாசிகளின் மனம் எப்படி? அவர்கள் எப்படி யோசிப்பார்கள் என நமக்குத் தெரியாது. வேற்று கிரக வாசிகள் வெவ்வேறு ரசாயன கலவைகளைக் கொண்ட மூளையைக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு எவ்வித பாசம் அல்லது நேசம் இல்லாமல் இருக்கலாம். அல்லது விசித்திரமான நடத்தைகள் கொண்டிருக்கலாம்!" என்று அவர் தெரிவித்தார்.

GJ 273 b கிரகம்
GJ 273 b என்ற கிரகம் பூமியில் இருந்து சுமார் 19 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் கிரகம் ஆகும். இது பூமியுடன் சுமார் 85% ஒத்து இருக்கிறது. இந்த கிரகத்திற்கு அரேசிபோ தொலைநோக்கி மூலம் மெசேஜ் ஒன்று அனுப்பப்பட்டது. 2029இல் இந்த மெசேஜ் அங்குச் சென்று சேரும் என்றும் இதற்கான பதில் வரும் 2041க்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதில் வெறும் இசையும் அதை டீகோட் செய்வதற்கான அறிவியல் பயிற்சியும் மட்டுமே உள்ளதால், அதைப் புரிந்து வேற்றுகிரகவாசிகள் அதற்குப் பதில் அளிக்கும் வாய்ப்பு குறைவு என்றும் ஆல்பர்டோ கபல்லெரோ தெரிவிக்கிறார்.

ஏலியன் இன்வேஷன்
நமது இந்த பால்வழி மண்டலத்தில் பூமிக்கு எதிராக ஏலியன் இன்வேஷனை 4 கிரகங்கள் நடத்த வாய்ப்புள்ளதாக ஆல்பர்டோ கபல்லெரோ குறிப்பிடுகிறார். கடந்த நூற்றாண்டின் உலக படையெடுப்புள், சம்பந்தப்பட்ட நாடுகளின் ராணுவ திறன்கள், ஆற்றல் நுகர்வு ஆகியவற்றை கொண்டு அவர் இதைக் குறிப்பிடுகிறார். தனது ஆய்வு தவறாகவும் இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ள ஆல்பர்டோ கபல்லெரோ, இருப்பினும் இந்த ஆய்வு வேற்று கிரகங்களுக்கு மெசேஜ் அனுப்பும் சோதனை முறை தொடர்பான சர்வதேச விவாதத்திற்கு ஒரு தொடக்கப் புள்ளியாக அமையும் என்று தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications