சுங்க கட்டணம் குறையப்போகிறது? இனிமேல் 60 கி.மீக்கு ஒரு டோல் கேட்தான்.. அடித்து சொன்ன நிதின் கட்கரி
டெல்லி: இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒருமுறை மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த புதிய நடைமுறை 3 மாதங்களில் அமலுக்கு வர உள்ளது. இதனால் 60 கிலோமீட்டருக்கு இடையேயான சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடைபெற்று வருகிறது. இன்றும் நாடாளுமன்ற இரு அவைகளும் கூடின.
இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறைக்கான திட்டங்கள் குறித்த கேள்விக்கு லோக்சபாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தடையற்ற போக்குவரத்து
டெல்லி-அமர்தசரஸ்-காத்ரா எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி-அமிர்தசரஸ் இடையேயான சாலை பணி இந்த ஆண்டுக்குள் முடிக்கப்படும். இதன்மூலம் டெல்லி-அமிர்தசரஸ் இடையேயான பயணநேரம் 4 மணிநேரம் வரை குறையும். மேலும் ஸ்ரீநகர்-ஜம்மு சாலை, காத்ரா-அமிர்தசரஸ்-டெல்லி சாலையுடன் இணைக்கப்பட உள்ளது. இது தடையற்ற போக்குவரத்துக்கு வழிவகுக்கும். இந்தச் சாலையின் மூலம் ஸ்ரீநகரில் இருந்து மும்பைக்கு விரைவாக செல்ல முடியும்.

இலக்கு நிர்ணயம்
இந்த ஆண்டு இறுதிக்குள் (ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையை மேம்படுத்துவதற்கு) முயற்சித்து வருகிறேன். டெல்லி-ஜெய்ப்பூர், டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-டேராடூன் விரைவுச்சாலைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும். 2024 ஆம் ஆண்டுக்குள் ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் 11,650 அடி உயர பாதையான ஜோஜி லா சுரங்கப்பாதையைத் திறக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். மத வழிப்பாட்டு தலங்களை இணைக்கும் வகையில் உத்தரகாண்ட் வழியாக மானசரோவர் (திபெத்) சாலை திட்டம் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் தயாராகி விடும்.

தமிழ்நாடு மாதிரி
சாலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து கார்களிலும் ஆறு ‛ஏர் பேக்' இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் பேர் சாலை விபத்துக்களில் பலியாகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாக உள்ளனர். இதனால் உலக வங்கியுடன் இணைந்து மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. உலக வங்கி தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றி விபத்துகளை குறைப்பதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளது. இதனால் தமிழ்நாடு மாதிரியை அமல்படுத்த முயற்சி மேற்கொள்கிறோம்.

60 கிலோமீட்டருக்கு ஒருமுறை
மேலும் இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோமீட்டருக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகள் அடுத்த 3 மாதங்களுக்குள் மூடப்படும். இதன்மூலம் 60 கிலோமீட்டருக்கு ஒருமுறை மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications