“இதற்காகதான் நான் பிரார்த்தனை செய்திருந்தேன்”: நொய்டா கட்டிடத்தை இடிக்க இவ்வளவு ஆர்வமா?
நொய்டா: உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அடுக்குமாடி இரட்டை குடியிருப்பை தகர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதனை தகர்ப்பதுதான் தனது கனவு என ஒருவர் தெரிவித்துள்ளார்.
சேத்தன் தத்தா எனும் பொறியாளர்தான் இந்த கட்டிடத்தை இடிக்கும் நபராவார். அதாவது வெடிமருந்து நிரப்பப்பட்ட கட்டிடத்தை இடிக்க வெடி மருந்துகளை வெடிக்க வைக்கும் பட்டனை அழுத்தும் நபர் இவர்தான்.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இது மிகவும் சாதாரண வேலை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதுவும் பெருநகரங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு இருப்பிட வசதிகளை உருவாக்கிடவும், இதனை உருவாக்கும் நிறுவனங்களுக்கு இடையேயுள்ள போட்டியும் இம்மாதிரியான விதி மீறல்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் நொய்டா பகுதியில் உள்ள ஒரு இரட்டை அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுமார் 100 மீட்டர் உயரம் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒவ்வொன்றும் 40 தளங்களை கொண்டுள்ளது. ஆனால் இது பசுமையான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும், இதை கட்டியதில் விதி மீறல்கள் அதிக அளவில் நடந்துள்ளது என்றும் நீதிமன்றத்தில் குடியிருப்பு வாசிகளால் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் (2012ல்) வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதமே இந்த கட்டிடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சிலபல பாதுகாப்பு காரணங்களுக்கா ஓராண்டாக இந்த இடிப்பு தள்ளிப்போயுள்ளது.
இந்நிலையில் நாளை (ஆக.28) இக்கட்டிடம் இடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு நீதிமன்றம் உத்தரவு வழங்கியதிலிருந்து இந்த கட்டிடத்தை இடிக்க காத்துக்கொண்டிருப்பதாகவும், அதற்கான பட்டனை அழுத்த நீண்ட நாட்கள் பிரார்த்தனை செய்து வந்ததாகவும் ஹரியானாவின் ஹிசாரைச் சேர்ந்த சேத்தன் தத்தா கூறியுள்ளார். கோபுரங்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள எடிஃபைஸ் இன்ஜினியரிங், பிளாஸ்டராக செயல்பட தத்தாவவை அழைத்துள்ளது.
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் அந்த செய்தியை யாரோ ஒருவர் எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினார். நான் அப்போதிலிருந்து பிரார்த்தனை செய்ய தொடங்கினேன். ஆனால் நான் தேர்வு செய்யப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. இதனையடுத்து சில மாதங்கள் கழித்து எடிஃபைஸ் என்னையும் எனது நிறுவனத்தையும் வெடிமருந்துகளை கட்டிடங்களில் நிரப்புவதற்காக அணுகியது." என கூறியுள்ளார்.
மேலும், "கடந்த 10 நாட்களாக நாங்கள் மிகவும் கவனமாக வெடிப்பொருட்களை கட்டிடங்களில் நிரப்பியுள்ளோம். இப்போது எல்லாம் தயாராக உள்ளது." என்றும் கூறியுள்ளார். சுமார் 7.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த கட்டிடங்கள், ஆகஸ்ட் 28ம் தேதி மதியம் 2.30 மணிக்கு இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இடிப்புக்கு சுமார் 3,700 கிலோ வெடிமருந்துகள் தேவைப்படும். இதன் மூலம், ரிக்டர் அளவில் 4 வரை அதிர்வுகள் உண்டாகும்.
இவ்வாறு உண்டாகும் அதிர்வுகள் 30 மீட்டர்கள் வரை உணர முடியும். ஆனால் நல்வாய்ப்பாக, நொய்டா நகரம் ரிக்டர் அளவு 6 வரை நில அதிர்வுகளை தாங்கும் என்பதால் எந்த பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த இடிப்பு காரணமாக அக்கம் பக்கத்தில் உள்ள சுமார் 7,000 பேர் காலை 7 மணிக்கு இந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை முழுமையாக இடித்து தரைமட்டமாக்க சுமார் 9 விநாடிகள் வரை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.