'மிஷன் சவுத்'.. தென்னிந்தியாவுக்கு மேலும் 3 வந்தே பாரத்.. எங்கெங்கு தெரியுமா? சூப்பர் அறிவிப்பு!
டெல்லி: தென்னிந்தியாவுக்கு மேலும் 3 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி தென்னிந்தியாவில் பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்க இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது.
நாடு முழுவதும் தற்போது வரை 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேலும் மூன்று ரயில்களை தென்னிந்திய பகுதியில் இயக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. தென்னிந்தியாவை பொறுத்த அளவில் சென்னை-பெங்களூரு-மைசூரு இடையே முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. மொத்தமுள்ள 503 கி.மீ தொலைவை வந்தே பாரத் ரயில் சுமார் 6.30 மணி நேரத்தில் கடக்கிறது.
இதனையடுத்து செகந்திராபாத்திலிருந்து விசாகப்பட்டிணத்திற்கு கடைசியாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் தற்போது வரை 100 சதவிகித பயணிகளுடன் இயங்கி வருகிறது. இந்நிலையில் இதனை தொடர்ந்து தற்போது மேலும் 3 ரயில்களை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடாகவிலும் தெலங்கானாவிலும் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதேபோலே ஆந்திரப் பிரதேசத்தில் 2024ம் ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது.
கொங்கில் சமகவிற்கு பங்கு இருக்கு.. ஈரோடு கிழக்கு எங்களுக்கே! மாலையே அறிவிப்பு: சரவெடியாய் சரத்குமார்
மிஷன் சவுத்
எனவே இங்கு பாஜகவின் செல்வாக்கை வளர்க்க 'மிஷன் சவுத்' எனும் திட்டத்தை பாஜக ஏற்கெனவே செயல்படுத்தி வருகிறது. தற்போது அதன் ஒரு பகுதியாக இந்த புதிய வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்துவது என திட்டமிட்டிருக்கிறது. அதன்படி தெலங்கானாவின் கச்சேகுடாவிலிருந்து கர்நாடகாவின் பெங்களூரு வரையில் ஒரு ரயிலும், தெலங்கானாவின் செகந்தராபாத்திலிருந்து ஆந்திராவின் திருப்பதி வரையிலும் திருப்பதியிலிருந்து மகாராஷ்டிராவின் புனே வரையிலும் புதிய ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓராண்டில்
இப்படியாக இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 75 வந்தே பாரத் ரயில்களையும், அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 400 ரயில்களையும் இயக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டிருக்கிறது. இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் கடந்த 2019ம் ஆண்டு டெல்லிக்கும் வாரணாசிக்கும் இடையே வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்பட்டது. அதேபோல இரண்டாவது ரயில் டெல்லியிலிருந்து கத்ராவுக்கும் மூன்றாவது ரயில் காந்தி நகரிலிருந்து மும்பைக்கும், நான்காவது ரயில் டெல்லியிலிருந்து இமாச்சலப் பிரதேசத்தின் ஆம்பி அண்டௌரா ரயில் நிலையத்திற்கும் இயக்கப்பட்டது. அதன் பின்னர்தான் 5 வது ரயில் சென்னையிலிருந்து மைசூர் வரை இயக்கப்பட்டது.
மூன்று
இந்நிலையில் தற்போது அடுத்தடுத்து மூன்று ரயில்கள் தென்னிந்தியாவுக்கு அறிவிக்கப்பட இருப்பதாக வெளிவந்துள்ள தகவல்கள் தென்னிந்திய மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இது முழுமுழுக்க அரசியல் நோக்க கொண்ட அறிவிப்பாக இருக்கலாம் என்றும் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. பாஜகவின் 'மிஷன் சவுத்' மூலம் பாஜக தென் மாநிலங்களில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதன் நோக்கம் மாநில கட்சிகளை பலவீனப்படுத்துவதுதான். அதேபோல தேசிய கட்சிகளின் வாக்கு வங்கியை குறி வைத்து உடைப்பதுதான். எனவேதான் தற்போது தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கேரளா
தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தற்போது வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வந்தாலும், கேரளாவை பொறுத்த அளவில் இன்னும் இந்த ரயில் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. ஏற்கெனவே பாரத் ஜடோ யாத்திரையின் போது கேரளாவில் அதிக நாட்கள் பயணித்த ராகுல் காந்தி காங்கிரஸ் வாக்க வங்கிகளை ஒன்று சேர்த்திருக்கிறார், அதேபோல ஆளும் சிபிஎம் கட்சியும் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில், பாஜக இந்த வந்தே பாரத் ரயில் மூலம் மாநிலத்தில் நுழையலாம் என்று கணக்கிட்டு வருகிறது.