கொரோனா அதிகரிக்க வாய்ப்பு.. எதற்கும் தயார் நிலையில் இருங்க.. மாநிலங்களுக்கு மத்திய அரசு அவசர கடிதம்
டெல்லி: தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளில் வேகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சுமார் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
30 முறை உருமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படும் இந்த மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் டெல்டாவை வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
அட சூப்பர்.. ஓமிக்ரான் முதலில் கண்டறியப்பட்டதே தென்னாப்பிரிக்கா.. அங்கிருந்து வந்த நல்ல செய்தி!
இந்தியாவிலும் புகுந்த ஓமிக்ரான்
இந்தியாவிலும் ஓமிக்ரான் வைரஸ் ஏற்கனவே புகுந்து விட்டது. முதன் முதலாக கர்நாடகா மாநிலத்தில் கால் பதித்த ஓமிக்ரான் வைரஸ் தற்போது டெல்லி, மகாரஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா என பல்வேறு மாநிலங்களுக்கு பரவி விட்டது. இந்தியாவில் 1,000-க்கும் மேற்பட்ட ஓமிக்ரான் பாதிப்புகள் உள்ளன. ஓமிக்ரான் வேகமாக பரவினாலும் டெல்டாவை விட இதன் ஆபத்து குறைவுதான் என்று ஒரு பக்கம் கூறினாலும், மறு பக்கம் இது ஆபத்தானதுதான் என்று தகவல்கள் வருகின்றன.
மீண்டும் 16,000-ஐ கடந்த கொரோனா
இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் ஒருபக்கம் வேகமாக பரவி கொண்டிருக்க, கொரோனா வைரஸ் மீண்டும் 16,000-ஐ கடந்து செல்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிவேகம் கண்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் இனி வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைக்கும்படி
மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசு எச்சரிக்கை
இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன்அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- ஓமிக்ரானின் பரவலின் பின்னணியில், உலகம் முழுவதும் தற்போது கொரோனா பாதிப்புகள் எழுச்சி பெற்று வருகிறது. ஐரோப்பா நாடுகள், அமெரிக்கா உள்பட பல வளர்ந்த நாடுகள் கடந்த சில வாரங்களில் புதிய பாதிப்புகளின் கணிசமான உயர்வைப் பதிவு செய்கின்றன, இது வைரஸின் அதிக பரவலைக் குறிக்கிறது.
சுகாதார உள்கட்டமைப்பு
இந்தியாவில் 31-ம் தேதி கடந்த 70 நாட்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 16,764 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இனி வரும் காலத்தில் கொரோனா அதிகரிக்கலாம் என்பதால் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் சுகாதார உள்கட்டமைப்பை சரியான நேரத்தில் மற்றும் விரைவாக மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்த வேண்டியது அவசியமாகிறது.
மாவட்ட அளவிலான கண்காணிப்பு வேண்டும்
ஊரக பகுதிகளிலும் அழுத்தமான சுகாதார உள்கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும். மேக்-ஷிப்ட் மருத்துவமனைகள் கள அளவில் உருவாக்கப்பட வேண்டும். மாவட்ட அளவிலான கண்காணிப்பு செயல்படுத்தப்பட வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி உடனடி சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.