“மோடி அற்புதமான மனிதர்.. ஆனால் போரை நான்தான் நிறுத்தினேன்!” டிரம்ப் மீண்டும் உறுதி
வாஷிங்டன்: இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து டிரம்பின் கருத்துக்களை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும், "போரை நான்தான் நிறுத்தினேன்" என்று டிரம்ப் உரிமை கொண்டாடியுள்ளார். இது குறித்து காங்கிரஸ் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
கனடாவில் ஜி-7 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியிருந்தார். இந்த உரையாடலின் போது பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்து விவரித்தார்.

"பாகிஸ்தான் விடுத்த வேண்டுகோளை ஏற்றுதான் தாக்குதல் நடவடிக்கையை இந்தியா நிறுத்தியது.அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தங்களுக்காகவோ அமெரிக்காவின் அழுத்தங்களுக்காகவோ தாக்குதலை இந்தியா நிறுத்தவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரையில் பாகிஸ்தான் விவகாரத்தில் எந்த ஒரு நாட்டின் தலையீட்டையும் அனுமதிக்க முடியாது என்பதுதான் நிலைப்பாடு" என டிரம்ப்பிடம் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார் என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் இந்தியில் அறிக்கையை விடுத்திருந்தார்.
ஆனால், இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களில், டிரம்ப் மீண்டும் போர் நிறுத்தத்திற்கு உரிமை கொண்டாடினார். "நான் போரை நிறுத்தினேன். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போரை நான்தான் நிறுத்தினேன். நான் பாகிஸ்தானை நேசிக்கிறேன். மோடி ஒரு அற்புதமான மனிதர். நேற்று இரவு நான் அவரிடம் பேசினேன். மோடியுடன் நாம் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்யப் போகிறோம்" என்று கூறியுள்ளார்.
இதனை மேற்கோளிட்டு காங்கிரஸ் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், "ஒரு வெளிநாட்டுத் தலைவர் ஏன் ஒரு முக்கியமான தேசிய பாதுகாப்பு நடவடிக்கையை முதலில் அறிவிக்கிறார்? இன்னும் விசித்திரமானது உலகளாவிய வெளியுறவுத்துறை விஷயத்தை இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் ஏன் இந்தியில் அறிக்கையை வெளியிட்டார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அரசு தொடர்ந்து, போர் நிறுத்தம் தொடர்பான டிரம்பின் கருத்துக்களை மறுத்து வரும் நிலையில், மீண்டும் மீண்டும் டிரம்ப் அதே கருத்தை தெரிவித்திருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications