நல்லா பாருங்க.. இதுதான் டெல்லி ரயில் நிலையம்.. பளபளன்னு கண்ணாடி மினுங்க.. வெளியான படம்!
டெல்லி: புது டெல்லி ரயில் நிலையத்தை மறு கட்டமைப்பு செய்வது குறித்த இரண்டு படங்களை ரயில்வே அமைச்சகம் டிவிட்டரில் பதிவிட்டிருந்தது.
பார்ப்பதற்கு மேற்கு நாடுகளின் உள்ள ரயில் நிலையங்களின் தொற்றத்தை ஒட்டியுள்ள இந்த படங்கள் டிவிட்டரில் பெரும் விவாதங்களை கிளப்பின.
ரயில் நிலையத்தை பேரழகாக கட்டியெழுப்புவதை விட ரயில்கள் தாமதமாவதற்கும், விபத்துக்களை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிவிட்டர் பயனாளர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியன் ரயில்வே
இந்திய ரயில்வே நீண்ட நெடும் பாரம்பரியம் மிக்கது. இது தற்போது இந்த பழம்பெருமையுடன் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ராஜஸ்தானின் கோட்டா என்ற இடத்திலிருந்து மத்திய பிரதேசத்தின் நக்டா என்ற இடம் வரை 'வந்தே பாரத்' பாரத் எனும் அதிநவீன ரயிலை இயக்கி சோதித்து பார்த்தது. இந்த ரயில் மணிக்கு 120 கி.மீ முதல் 183 கி.மீ வரை இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இது இந்திய ரயில்வே நவீனப்படுத்துதலின் ஒரு அம்சமாக பார்க்கப்பட்டது.

புதிய ரயில் நிலையம்
அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டின் பல இடங்களில் சுமார் 200 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த நவீனமயமாதலின் ஒரு அங்கமாக டெல்லி ரயில் நிலையத்தை மேம்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. அதற்கான படங்களையும் டிவிட்டர் பக்கத்தில் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படங்களில் அதிகமான கண்ணாடி வேலைப்பாடுகளுடன் கூடிய இரண்டு கட்டடங்கள் இடம்பெற்றுள்ளன.

விமர்சனங்கள்
இந்த படங்கள் தற்போது டிவிட்டர் பயனாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த படங்கள் பகிரப்பட்ட சில மணிநேரங்களில் 17,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றிருந்தாலும் சில விமர்சனங்களையும் பெற்றுள்ளது. குறிப்பாக இந்த நவீன ரயில் நிலையங்கள் அமைய வேண்டும் எனில் அதிக இடம் தேவைப்படும் என தெரிய வருகிறதாகவும், எனவே சுற்றுப்புறத்தில் உள்ளவர்களின் இடங்கள் கையகப்படுத்தப்படும் அபாயம் மேலெழும் எனவும் ஒரு டிவிட்டர் பயனர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தனி பட்ஜெட்
மேலும், இவ்வாறு கண்ணாடிகள் கொண்டு கட்டப்படும் கட்டிடங்கள் டெல்லியின் வெயிலுக்கு எப்படி தாக்குப்பிடிக்கும் என்றும் சில பயனர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். அதேபோல, ரயில் நிலையத்தை இவ்வளவு பிரமாண்டமாக கட்டமைக்கும் செலவில், அடிக்கடி ஏற்படும் ரயில் விபத்துகள் மற்றும் ரயில்கள் தாமதமாகும் பிரச்னைகளுக்கும் தீர்வினை காண்பதற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த 1920ம் ஆண்டிலிருந்து இந்திய ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த 2016ல் பாஜக ஆட்சியில் முதன் முறையாக இது பொது பட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications