பிரதமர் மோடி தலைமையில்.. கொரோனா பரவலை மத்திய அரசு சிறப்பாகவே கையாண்டு வருகிறது.. அமித் ஷா பெருமிதம்
டெல்லி: கொரோனா 2ஆம் அலையால் நாட்டில் ஏற்பட்ட சவால்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய மாநில அரசுகள் மிகச் சிறப்பாக எதிர்கொண்டதாக உள் துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் 2ஆம் அலை மெல்லக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.34 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகள் அதிகரித்துள்ளதால், நாட்டில் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை உள் துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
நரேந்திர மோடி தலைமை
அப்போது பேசிய அவர், "வழக்கமான காலங்களில் நாட்டில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால், ஒரே மாதத்தில் நாட்டின் ஆக்சிஜன் தேவை கூடுதலாக 10,000 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது. அதாவது நாட்டின் ஆக்சிஜன் தேவை ஒரே மாத்தில் 10 மடங்கு அதிகரித்தது. இது அரசுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது, ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், மத்திய மாநில அரசுகள் இந்த சவாலைச் சமாளிக்கும் பணிகளை எடுக்கத் தொடங்கின.
ஆக்சிஜன் தேவை
மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்ததால் நாட்டின் தொழிற்சாலைகளுக்கு உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அங்கு மருந்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டன. நாட்டில் ஆக்சிஜன் லாரிகள் குறைவாகவே இருந்தது. இந்தச் சிக்கலைப் போக்க, வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் லாரிகள் வாங்கப்பட்டன. இதுதவிர சுமார் 15,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ரயில்களில் நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டன.
ஆக்சிஜன் ஆலைகள்
கொரோனா முதல் அலைக்குப் பிறகு நாடு முழுவதும் 162 ஆக்சிஜன் ஆலைகள் பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து ஏற்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. பல அமைச்சகங்கள் மூலம் நாட்டில் 100க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் ஆலைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வரும் நாட்களில், நாடு முழுவதும் சுமார் 300 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் ஏற்படுத்தப்படும் " என்றும் அவர் கூறினார்.
21 கோடி பேருக்கு தடுப்பூசி
இந்தியாவில் இப்போது வரை 21 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா கொரோனா 2ஆம் அலையில் இருந்து விரைவாகவே மீண்டு வந்துவிட்டதாகவும் உள் துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்,.
கொரோனா குறைகிறது
மேலும், நாட்டில் கொரோனா பாதிப்பு மெல்லக் குறைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஆக்சிஜன் தேவை குறைந்து வருவதாகவும் கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவதாகவும் அவர் தெரிவித்தார். இக்கட்டான நேரத்தில் பாதுகாப்புப் படையினர், ஆய்வாளர்கள், ரயில்வே ஊழியர்கள் ஆகியோரின் பங்கு சிறப்பாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.