நாடாளுமன்றத்தில் ஒரு பிக்பாஸ் வீடு.. பட்ஜெட்டுக்கு முன் அல்வா தயாரிப்பது ஏன்? வெளியான சுவாரசியம்!
நாடாளுமன்றத்தில் அல்வா தயாரிப்புடன் பட்ஜெட் ஆவணங்கள் தயாரிக்கும் பணி இன்று தொடங்கி உள்ளது.
டெல்லி: ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு நிதி அமைச்சர் அல்வா கிண்டும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அல்வா தயாரிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டுகிறார். இது ஏன் காலம்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது என்பது பற்றியும், பட்ஜெட் தயாரிப்பையொட்டி நிதித்துறையின் ஊழியர்கள், அதிகாரிகள் பிக்பாஸ் வீட்டில் இருப்பது போன்ற சூழலை எதிர்கொள்வார்கள் என்பது பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் என 2 பட்ஜெட்டுகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சரும், ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சரும் தாக்கல் செய்து வந்தனர்.
ஆனால் 2014ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நடைமுறை மாற்றம் செய்யப்பட்டது. தற்போது ரயில்வே உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் சேர்த்து மத்திய நிதியமைச்சர் மட்டுமே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
கடைசி முழு மத்திய பட்ஜெட் 'ரெடி’.. இன்று அல்வா கிண்டுகிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
மத்திய பட்ஜெட் எப்போது?
இந்நிலையில் தான் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி துவங்கி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மொத்தம் 2 பகுதிகளாக 27 அமர்வுகள் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 9 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த கூட்டத்தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அல்வா கிண்டும் நிதி அமைச்சர்
இந்நிலையில் தான் மத்திய பட்ஜெட் தயாரிக்கும் வகையில் பல்துறைகளை சேர்ந்தவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். இந்த ஆலோசனைகள் முடிவடைந்த நிலையில் தற்போது மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகள் துவங்க உள்ளது. கொரோனா பரவலால் கடந்த ஆண்டு அல்வா தயாரிக்கப்படாத நிலையில் இன்று பாரம்பரியம் மற்றும் மரபுப்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டி மத்திய பட்ஜெட் ஆவணங்கள், பட்ஜெட் உரை அச்சடிப்பு பணியை துவக்கி வைக்க உள்ளார். இந்நிலையில் தான் ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தயாரிப்பின்போது அல்வா கிண்டப்படுவது ஏன்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதற்கான சந்தேகத்தை தீர்த்து வைக்கத்தான் இந்த செய்தி.
அல்வா கிண்டுவது ஏன்?
அதாவது இந்தியாவில் பொதுவாக பெரும்பாலான மக்கள் நல்ல விஷயங்களை செய்வதற்கு முன்பாகவும் இனிப்பை சுவைப்பதும், பரிமாறுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் மத்திய பட்ஜெட் என்பது ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியை உள்ளடக்கிய பட்ஜெட்டாகும். இதனால் பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடிக்கும் முன்பு ஆண்டுதோறும் மத்திய நிதி அமைச்சர்கள் அல்வா தயார் செய்து நிதித்துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்குவார்கள். இந்தியாவில் பலவிதமான இனிப்புகள் இருந்தாலும் கூட குறிப்பாக அல்வா மட்டுமே சமைப்பதன் பின்னணி என்ன? என்பதற்கான சரியான காரணம் இன்னும் தெளிவாக கூறப்படவில்லை. இந்நிலையில் தான் இன்று அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிக்கும் பணி தொடங்கி நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிப்பு பணி என்பது நிதி அமைச்சகம் அமைந்துள்ள நாடாளுமன்ற வடக்கு பிளாக்கில் அல்வா கிண்டும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
ரகசியம் காக்க நடவடிக்கை
இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் முக்கிய ஆவணங்கள் மட்டுமே அச்சிடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியாவின் பட்ஜெட் என்பது மிகவும் முக்கியமாகும். இது ராணுவ ரகசியம் போன்று காக்கப்படும். பட்ஜெட்டில் கொண்டு வரப்படும் அறிவிப்புகள், திட்டங்கள் பற்றி வெளியே தகவல்கள் தெரியாமல் பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டு மத்திய நிதி அமைச்சகம் பெரும் முயற்சியை மேற்கொள்ளும். அதாவது அல்வா கிண்டும் நிகழ்ச்சியை தொடர்ந்து பட்ஜெட் ஆவணங்கள் தயாரிப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் முழுமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள்.
பிக்பாஸ் வீடு போன்று..
நிதி அமைச்சகம் அமைந்துள்ள வடக்கு பிளாக்கில் பட்ஜெட் தயாரிப்பு நடக்கும் இடத்திலேயே அவர்கள் தங்க வைக்கப்படுவார்கள். இவர்கள் தங்களின் குடும்பத்தினர் உள்பட வெளிநபர்களுடன் பேச அனுமதிக்கப்படுவது இல்லை. செல்போன், இணையதளங்கள் பயன்படுத்த முடியாது. இதனால் ஏறக்குறை 10 நாட்களும் பட்ஜெட் தொடர்பான ரகசியங்களை காக்க இவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பதை போன்ற நிலையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.