வேற லெவல் கனெக்டிவிட்டி.. 500 நாட்களில் 25,000 செல்போன் டவர் அமைக்க ரூ.26,000 கோடி- மத்திய அமைச்சர்
டெல்லி: 500 நாட்களில் 25,000 புதிய செல்போன் டவர்களை நிறுவுவதற்கு மத்திய அரசு ரூ26,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், ரயில்வே அமைச்சருமான அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மாநிலங்களின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களின் டிஜிட்டல் இந்தியா தொடர்பான 3 நாட்கள் மாநாடு கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. இம்மாநாட்டின் முதல் நாளில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முன்னுரிமை அடிப்படையிலான முக்கிய அம்சங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்முயற்சிகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன. மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், ரயில்வே அமைச்சருமான அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தொழில்நுட்ப அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான், ஆந்திரா, அசாம், பீகார், மத்திய பிரதேசம், குஜராத் கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், தெலுங்கானா, மிசோரம், சிக்கிம் மற்றும் புதுச்சேரி.ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
டிஜிட்டல் இந்தியா திட்டம், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சென்றடையச் செய்வதில் தகவல் தொடர்பு முக்கிய பங்கு வகிப்பதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார். அடுத்த 500 நாட்களில் புதிதாக 25,000 தொலைத்தொடர்பு கோபுரங்களை நிறுவ 26,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பிரதமரின் கதி சக்தி பெருந்திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விரைவாக தங்களை இணைத்துக் கொண்டதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மூலதனச் செலவினங்களுக்காக மாநிலங்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மாநிலங்கள் வர்த்தகர்களை ஈர்க்கும் வகையில் அதற்கு உகந்த கொள்கைகளை வகுத்து செயல்படுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.